எங்கள் அகமும் தமிழ்தான்.. எங்கள் நாடலும் தமிழ்தான்.. தமிழ்நாடுதான்.. திருமாவளவன்

Su.tha Arivalagan
Jan 06, 2023,12:55 PM IST
சென்னை:  தமிழ்நாடு என்ற வார்த்தையை வைத்து கிளப்பப்பட்டுள்ள சர்ச்சை குறித்து விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.



தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பேசுகையில், இந்தியா ஒன்றை நினைத்தால் தமிழ்நாடு மட்டும் எப்போதுமே தனித்து சிந்திக்கிறது. தமிழ்நாட்டின் அரசியல் வித்தியாசமாக உள்ளது. தமிழ்நாடு என்ற பெயரே முதலில் சரியல்ல. தமிழகம் என்பதுதான் சரியானது என்று பேசியிருந்தார். அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தமிழ்நாடு என்ற வார்த்தையை டிவிட்டரில் டிரெண்டாக்கியுள்ளனர். பலரும் பதில் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தொல். திருமாவளவன் ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

அகம்- உள்ளத்தையும் குறிக்கும்; இல்லத்தையும் குறிக்கும்.
நாடு- தேசத்தையும்
குறிக்கும்; தேடலையும் குறிக்கும்.
எங்கள் அகமும் தமிழ்தான். எங்கள் நாடலும் தமிழ்தான். எங்கள் தமிழ்அகமே
தமிழ்நாடு தான்.
எங்கள் அகமும் புறமும் தமிழ்நாடு தான். 
அது விரிந்தது.பரந்தது. உயர்ந்தது.சிறந்தது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதேபோல திமுக சார்பில் டி.ஆர்.பாலு எம்பி, ஆளுநரின் பேச்சுக்கு கடும் கண்டன் தெரிவித்து மிக நீண்ட அறிக்கையை நேற்று வெளியிட்டிருந்தார். பல்வேறு தலைவர்களும், தமிழறிஞர்களும் கூட ஆளுநரின் பேச்சு சரியல்ல என்று சுட்டிக் காட்டி கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.