சிதம்பரம் தொகுதியை வலம் வரும் பிரமாண்ட பானை.. திருமாவளவனுக்கு மண்பாண்ட கலைஞர்கள் பரிசு!

Su.tha Arivalagan
Apr 05, 2024,07:47 PM IST

சிதம்பரம்: சிதம்பரம் தனி தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனுக்கு மண்பாண்டக் கலைஞர்கள் அளித்துள்ள பிரமாண்ட பானை பரிசு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.


தேர்தல்களில் சின்னம்தான் பிரதானமாக பார்க்கப்படும்.  சின்னத்திற்குத்தான் பெரும்பாலானவர்கள் வாக்களிக்கிறார்கள். குறிப்பாக படிப்பறிவில்லாதவர்கள், கிராமப்புற மக்கள் பலருக்கும் சின்னம்தான் தெரியும்.. அவர்களுக்குப் பிடித்த சின்னம் இருக்கிறதா என்று பார்த்துதான் வாக்களிப்பார்கள். இதனால்தான் கட்சிகளுக்கு சின்னம் மிக மிக முக்கியமானதாக இருக்கிறது.




விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நீண்ட காலமாக தனிச் சின்னத்திற்காக போராடிக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து ஒரே சின்னத்தில் போட்டியிட்டு  வெற்றி பெற்று வந்தால்தான் அந்த சின்னம் நிரந்தரமாகும் நிலை. இதனால்தான் இந்த முறை போராடி பானை சின்னத்தையே பெற்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இரு வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.


சிதம்பரம் தனி தொகுதியில் திருமாவளவன் மீண்டும் போட்டியிடுகிறார். அதேபோல விழுப்புரம் தனி தொகுதியில் மீண்டும் ரவிக்குமார் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். திருமாவளவனுக்கு ஆதரவாக உதயநிதி ஸ்டாலின், கமல்ஹாசன் உள்ளிட்ட தலைவர்கள் பிரச்சாரம் செய்துள்ளனர்.




இந்த நிலையில் திருமாவளவனுக்காக சிதம்பரம் தொகுதியைச் சேர்ந்து மண்பாண்டக்  கலைஞர்கள் பிரமாண்ட பானையைச் செய்து பரிசாக அளித்துள்ளனர். அந்தப் பானையை குட்டி யானை வண்டியில் ஏற்றி வைத்து தொகுதி முழுவதும் வலம் வரச் செய்துள்ளனர். இது பலரையும் கவர்ந்துள்ளது. பெரிய சைஸ் பானை குட்டி யானை மீது வலம் வருவதை மக்கள் ஆர்வத்துடன் வேடிக்கை பார்க்கின்றனர்.


மொத்தம் 4  பானைகளைச் செய்யவுள்ளனர். ஒவ்வொரு பானையும் 7 அடி உயரம் கொண்டது. 6 அடி அகலம் உடைய இப்பானையின் எடை 100 கிலோவாகும். இந்த பானையின் முன்பு தனது தொண்டர்களுடன் நின்று பெருமிதத்துடன் போஸ் கொடுத்துள்ளார் திருமாவளவன்.