சிதம்பரத்தில் நான் மீண்டும் போட்டியிடுகிறேன்.. விழுப்புரத்தில் ரவிக்குமார் .. திருமாவளவன் அறிவிப்பு

Manjula Devi
Mar 19, 2024,05:58 PM IST

சென்னை: திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், சிதம்பரம் (தனி) தொகுதியில் தான் மீண்டும் போட்டியிடுவதாகவும், அதேபோல விழுப்புரம் (தனி) தொகுதியில் மீண்டும் ரவிக்குமார் நிற்பதாகவும், கட்சி தலைவர் தொல் திருமாவளன் அறிவித்துள்ளார்.


லோக்சபா தேர்தல் தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்கவுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு திமுக கூட்டணியில், ஏற்கனவே சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தனி தொகுதிகள்  ஒதுக்கப்பட்டன. இந்த தொகுதிகளுக்கான வேட்பாளரை இன்று அறிவித்தார்  தலைவர் திருமாவளவன். 




அதில் விழுப்புரம் தொகுதியில் கடந்த முறை போட்டியிட்டு வென்ற ரவிக்குமார் இரண்டாவது முறையாக இந்த வருடமும் போட்டியிடுவதாகவும், சிதம்பரம் தொகுதியில் ஆறாவது முறையாக தான் போட்டியிடுவதாகவும் திருமாவளவன் அறிவித்தார்.


பின்னர் செய்தியாளர்களிடம் திருமாவளவன் பேசுகையில்,  இரண்டு தொகுதிகளிலும் பானை சின்னத்தில்  போட்டியிடுகிறோம். இந்த முறையும் நாடாளுமன்றத்துக்கு மக்கள் அனுப்பி வைப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் போட்டியிடுகிறேன். ராகுல் காந்தி மேற்கொண்ட இரண்டு பயணங்களும் நாட்டை பாசிச சக்திகளிடம் இருந்து காப்பாற்றுவதற்காக தான் இந்த பயணம் நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு பெருகி வருகிறது.


சாதிய மதவாத அரசியலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள். பாஜக ஆட்சியில் இருந்து அகற்றுவதே நாட்டு மக்களின் வேட்கையாக உள்ளது. மக்களவைத் தேர்தல் என்பது மக்களுக்கும் சங் பரிவார்களுக்கும் இடையே நடக்கும் யுத்தம். மக்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும். வெறுப்பு அரசியலை விதைத்து மக்களை பிளவுபடுத்த முயற்சிக்கிறார்கள். 


பாஜக, சங்பரிவார் அமைப்பு தமிழ்நாட்டில் வெறுப்பு அரசியலை நாளுக்கு நாள் தீவிரப்படுத்தி வருவது ஆபத்தானது. பாஜகவின் வெறுப்பு அரசியலுக்கு தமிழ்நாட்டில் இடம் கொடுக்கக் கூடாது.  பாஜக அணியில் ஒரே கூட்டணியாக இருந்தவர்கள் சிதறிப் போனார்கள். பாஜகவின் செயல்களை அறிந்தும் பாமக கூட்டணியில் இணைந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. 


பிற்படுத்தப்பட்ட மக்களை பாமக கைவிட்டாலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை நிற்கும். திமுக கூட்டணி தான் தமிழ்நாட்டில் வலுவாகவும், கட்டுக்கோப்பாகவும் உள்ளது என்றார் திருமாவளவன்.