வரலட்சுமிக்கே கூட இப்படித்தான் நடந்தது.. தமிழ் சினிமாவிலும் பாலியல் தொல்லை...ராதிகாவின் பகீர்

Aadmika
Sep 02, 2024,01:08 PM IST

சென்னை : தமிழ் சினிமாவிலும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை இருந்தது. அதை நானே தட்டிக் கேட்டுள்ளேன். பெரிய நடிகை ஒருவருக்கும் இப்படி நடந்துள்ளது. அந்த நபரை நானே கூப்பிட்டு எச்சரித்தேன் என நடிகை ராதிகா தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.


மலையாள திரையுலகில் நடக்கும் பாலியல் தொல்லைகள் தொடர்பான நீதிபதி ஹேமாவின் விசாரணை அறிக்கை, ஒட்டு மொத்த சினிமா உலகையும் உலுக்கி உள்ளது. இதனால் மலையாள நடிகர் சங்கம் கலைக்கப்பட்டு, பல நடிகைகள் தொடர்ந்து புகார் அளிப்பது, வழக்குப்பதிவு செய்வது என பல விஷயங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடிகை ராதிகா இந்த விவகாரம் குறித்து அளித்த பேட்டியில், தான் மலையாள படம் ஒன்றில் நடித்த போது நடிகைகளின் கேரவனில் ரகசிய கேமிராக்கள் வைத்து, அவர்கள் உடை மாற்றும் வீடியோக்களை சிலர் ரசித்து, சிரித்துக் கொண்டிருந்ததாக தெரிவித்தார்.




ராதிகாவின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏன் இதுவரை ராதிகா இது பற்றி யாரிடமும் சொல்லவில்லை? இப்போது மட்டும் இது பற்றி சொல்லுவதற்கு என்ன காரணம் என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இது பற்றி தனியார் டிவி ஒன்று, ராதிகாவிடமே விளக்கம் கேட்டது. துவக்கத்தில் தான் அப்படி சொல்லவில்லை என்ற ராதிகா, பிறகு அது நடந்தது உண்மை தான் என்றார். ஏன் அது பற்றி சொல்லவில்லை என கேட்டதற்கு, அது யூனிட்டில் இருக்கும் யாரோ சிலர் செய்தது. அதற்கும் தயாரிப்பு நிறுவனம், ஹீரோக்களுக்கும் தொடர்பு கிடையாது என்றார்.


சுடுதண்ணியை ஊத்தினேன்:


தொடர்ந்து தன்னுடைய பேட்டியில் ராதிகா கூறுகையில், சினிமா திரையுலகம் மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் இது போல் நடந்து கொண்டு தான் இருக்கும். இனி மேலாவது இது போல் நடக்காமல் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். வர லட்சுமிக்கும் கூட இப்படி நடந்த போது அதை அவர் தைரியமாக எதிர்கொண்டார்.  தமிழ் சினிமாவிலும் முன்பு அப்படி நடந்தது. ஒரு பெண் குளிக்கும் அறையின் ஜன்னல் வழியாக யாரோ பார்ப்பதாக அவர் என்னிடம் உதவி கேட்ட போது சுடு தண்ணீரை எடுத்து நான் ஊற்றி, உதவி இருக்கிறேன்.




பெரிய நடிகை ஒருவருக்கும் இது போல் நடந்தது. அவரை காப்பாற்றி, தவறாக நடந்த அந்த நபரிடம் இனி அவர்களை தொந்தரவு செய்யாதே என்று நானே எச்சரித்துள்ளேன். அந்த நடிகை தற்போது பெரிய நடிகர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு நன்றாக இருக்கிறார். சினிமா உலகில் இனி மேல் இப்படி நடக்காமல் இருக்க அனைவரும் கூடி பேசி, தீர்வு காண வேண்டும். தமிழ் சினிமாவில் மாஃபியாக்கள் இருப்பது பற்றி எனக்கு தெரியாது. எனக்கு தெரியாத விஷயங்கள் பற்றி நான் சொல்ல முடியாது.  


நடிகர் சங்க கூட்டத்திற்கு என்னை கூப்பிடுவதும் கிடையாது. நான் அங்கு செல்வதும் கிடையாது. என்னுடைய சூட்டிங் தளத்தில் தவறு நடந்தால் நான் உடனே வேலையை விட்டு நிறுத்தி, நடவடிக்கை எடுத்துள்ளேன் என ராதிகார தெரிவித்துள்ளார்.


நடிகைகள் ராதிகா, ஊர்வசி, லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுக்கள் குறித்து பேசி வருகின்றனர். முன்னணி நடிகர்கள் யாரும் இதுவரை இதுகுறித்து வெளிப்படையாக விவாதிக்காமல் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்