அங்கன்வாடி பள்ளியைத் திறந்து வைத்து.. "அ..ஆ" சொல்லிக் கொடுத்த வானதி சீனிவாசன்!

Su.tha Arivalagan
May 15, 2023,08:52 AM IST
கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் காந்திபுரம் பகுதியில் புதிய அங்கன்வாடி பள்ளிக்கூடத்தை கோயம்புத்தூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் தொடங்கி வைத்து பிள்ளைகளுக்கு அ, ஆ சொல்லிக் கொடுத்தார்.

காந்திபுரம் பகுதியில் புதிதாக அங்கன்வாடி பள்ளிக்கூடம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் பள்ளிக்கூடத்தை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் திறந்து வைத்தார். பின்னர் பள்ளிப் பிள்ளைகளிடம் உரையாடினார். சுவற்றில் வரைந்து வைத்திருந்த பழங்கள், பூக்கள், விலங்குகள் ஓவியங்களைப் பார்த்துப் பாராட்டினார். 



பிறகு அதில் வரையப்பட்டிருந்த தமிழ் எழுத்துக்களை குழந்தைகளிடம் காட்டி இது என்ன சொல்லுங்க என்று கேட்டார். குழந்தைகள் சரியாக சொல்லாதபோது அவரே திருத்தி இது அ இது ஆ இது இ என்று சொல்லிக் கொடுத்தார். திடீர் டீச்சராக மாறி குழந்தைகளிடம் பாசமாக பேசிய வானதி சீனிவாசனை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் வானதி சீனிவாசன் பேசுகையில், அங்கவான்டி பள்ளிகளுக்கு என மத்திய அரசிடம் பல திட்டங்கள் உள்ளன. அவற்றை இன்னும் நவீனமாக்கப் போகிறோம். அங்கன்வாடி பள்ளிகளுக்கு மாநில அரசும் முக்கியத்துவம் தர வேண்டும் என்றார் வானதி சீனிவாசன்.

கர்நாடக சட்டசபைத் தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, சட்டசபைத் தேர்தலுக்கும், நாடாளுமன்றத் தேர்தலுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. சட்டசபைத் தேர்தல் தோல்விக்கும், நாங்கள் நாடாளுமன்றத் தேர்தலில் பெறப் போகும் வெற்றிக்கும் சம்பந்தம் இல்லை. நிச்சயம் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக பெரிய வெற்றி பெறும். கர்நாடக சட்டசபைத் தேர்தல் தோல்விக்கான காரணம் ஆராயப்படும்.

கர்நாடக சட்டசபைத் தேர்தலில் அண்ணாமலை சிறப்பாகவே செயல்பட்டார். அதேபோல தமிழ்நாடு பாஜக பொறுப்பாளர் சி.டி. ரவி தோல்வி, தமிழ்நாட்டில் அவரது செயல்பாடுகளைப் பாதிக்காது. இந்தத் தோல்வி குறித்து ஆராய்ந்து, என்ன குறைகள் உள்ளன என்பதை தெரிந்து கொண்டு அதை நாடாளுமன்றத் தேர்தலுக்குள் சரி செய்து மீண்டும் பலத்துடன் நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராவோம் என்றார் வானதி சீனிவாசன்.