ஊழல் குடும்ப ஆட்சி நடத்தும் திமுக, கெஜ்ரிவாலை ஆதரிப்பதில் வியப்பில்லை: வானதி சீனிவாசன்

Meenakshi
Mar 30, 2024,06:32 PM IST

சென்னை:  ஊழல் குடும்ப ஆட்சி நடத்தும் திமுக, கெஜ்ரிவாலை ஆதரிப்பதில் வியப்பில்லை. மத்திய அரசு மீது திரும்ப திரும்ப அவதூறு பரப்புவதை முதலமைச்சர் ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


இது குறித்து வானதி சீனிவாசன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அறிக்கையில், ஊழல் குடும்ப ஆட்சி நடத்தும் திமுக , கெஜ்ரிவாலை ஆதரிப்பதில் வியப்பில்லை. திமுக அரசை விமர்சித்து முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை விமர்சித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டால் அவர்களை கைது செய்ய குஜராத் வரை விமானத்தில் செல்கிறது தமிழக காவல்துறை. நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்கிறது. இப்படி காவல்துறையை தங்களது ஏவல் துறையாக பயன்படுத்தி வரும் முதலமைச்சர் ஸ்டாலின், அமலாக்கத்துறை, வருமானத்துறை செயல்பாடுகள் பற்றி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.




அமலாக்கத்துறை வருமானத்துறை நடவடிக்கைகள் அனைத்தும் சட்டத்தின் அடிப்படையில் எடுக்கப்படுகிறது.ஆதாரங்களின் அடிப்படையில் நீதிமன்றங்கள் தான் கைது போன்ற அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கின்றன. ஆதாரங்கள் இல்லாமல் இரு மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், தெலுங்கானா முன்னாள் முதலைச்சர் சந்திரசேகரராவின் மகள் கவிதா, ஜார்கண்ட் முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரன் உள்ளிட்டோரை கைது செய்ய முடியாது.


இந்தியாவில் நீதித்துறை, உலகின் எந்த நாடுகளிலும் இல்லாத அளவுக்கு சுதந்திரமாகவும், அரசியன் தலையீடு இல்லாமல் இயங்க கூடியது. கெஜ்ரிவால் கைது பற்றி அவதூறு பரப்பவர்கள் இந்திய நீதித்துறையை நோக்கி கைகாட்டுகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். கெஜ்ரிவால் சிறைக்குச் சென்றுள்ளதால் அவரது மனைவி முதலமைச்சராக தயாராகி வருகிறார். அதாவது  திமுகவை பின்பற்றி ஊழல் செய்த கெஜ்ரிவால் அடுத்த குடும்ப ஆட்சிக்கு தயாராகி விட்டார். எனவே ஊழல், குடும்ப ஆட்சி நடத்திம் திமுக, கெஜ்ரிவாலை ஆதரிப்பதில் வியப்பில்லை.


தனி பெரும்பான்மையுடன் 10 ஆண்டுகள் தொடர்ந்து அதிகாரத்தில் இருக்கும் பாஜக அரசும், பிரதமர் மோடியும் ஜனநாயக பாதையில் இருந்து ஒரு அங்குலம் கூட நழுவி விடக்கூடாது என்பது உறுதியாக உள்ளனர். பிரதமர் மோடி ஆட்சியை குறை கூறுவார்கள். இந்திரா காந்தி தனிப்பெரும்பான்மையுடன் இருந்தபோது என்ன நடந்தது என்பதையும், நெருக்கடி நிலையை பிரகடனம் செய்து அரசியல் அமைப்புச் சட்டத்தையே முடக்கியவர். எனவே மத்திய அரசு மீது திரும்ப திரும்ப அவதூறு பரப்புவது முதலமைச்சர் ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.