"செந்தில் பாலாஜியைப் பார்த்தாலே பாவமா இருக்கு".. வருத்தப்படும் வானதி சீனிவாசன்!

Su.tha Arivalagan
Nov 28, 2023,06:59 PM IST

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி நிலையைப் பார்த்தாலே பாவமாக இருக்கிறது என்று பாஜக மகளிர் அணி தேசியத் தலைவரும், கோவை தெற்குத் தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.


அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு நெஞ்சு வலி வந்து துடித்து பிறகு மருத்துவமனையில் சேர்த்து அதன் பிறகு ஆபரேஷன் நடந்து என்று ஏகப்பட்ட விஷயங்கள் நடந்து விட்டன.


இப்போது அவர் ஜாமீனுக்காக போராடிக் கொண்டிருக்கிறார். உச்சநீதிமன்றம் வரை போயும் கூட அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. மூளையில் பிரச்சினை என்றெல்லாம் உச்சநீதிமன்றத்தில் சொல்லிப் பார்த்து விட்டார்கள்.. அதற்கெல்லாம் மருந்து இருக்கிறது, சாதாரண நோய்தானே என்று கூறி விட்டது உச்சநீதிமன்றம்.




இந்த நிலையில் மெலிந்த நிலையில் காணப்படும் செந்தில் பாலாஜியின் உருவமும் பேசு பொருளாகியுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் வானதி சீனிவாசன், செந்தில் பாலாஜி நிலை குறித்துக் கவலை தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடையே அவர் பேசுகையில் செந்தில் பாலாஜி குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், செந்தில் பாலாஜியின் உடல் நிலை அடிக்கடி மோசமாகிக் கொண்டிருப்பது, மனிதாபிமான அடிப்படையில் எங்களுக்கு வருத்தமாக இருக்கிறது. ஒரு வேளை சிறைத்துறை அவரை சரியாக கவனிக்கவில்லையா என்ற கேள்வி எழுகிறது.  தமிழக அரசின் கட்டுப்பாட்டில்தான் அவர் இருக்கிறார்.


அவருக்கு சரியான உணவோ மருத்துவ வசதியோ இல்லை கிடைக்கவில்லையா என்ற கேள்வியும் எழுகிறது. தமிழக அரசால் அவருக்குத் தேவையான மருத்துவத்தையோ, உடல் நிலையையோ கவனிக்க முடியாவிட்டால் மத்திய அரசின் உதவியை நாடலாம். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை கொடுக்கலாம் என்று கூறினார் வானதி சீனிவாசன்.