Hug Day 2025.. உசுரோடு உன்னை அணைக்கிறேன்.. அரவணையுங்கள் உங்களது அன்புக்குரியவரை.. இன்று!

Manjula Devi
Feb 12, 2025,10:01 AM IST

சென்னை: உனக்காக வாழ நினைக்கிறேன் உசுரோடு வாழ துடிக்கிறேன்.. என்ற நம்பிக்கைகளைக் கடந்து காதலர்களின் அரவணைப்பில் வரும் உணர்வுபூர்வமான அன்பின் வெளிப்பாடு தான்.. ஹக் டே! 


உலகம் முழுவதும் அன்பின் அடையாளமாக திகழும் காதலர் தினத்தை மகிழ்ச்சியாக கொண்டாடி  வருவது காதலர்களின் வழக்கம். அந்த வரிசையில் காதலர் தின ஒரு வார கொண்டாட்டத்தில் ஆறாவது நாளான பிப்ரவரி 12ஆம் தேதி ஹக் டே கொண்டாடப்படுகிறது. இந்நாளில்  காதலர்கள் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு அன்பை வெளிப்படுத்தும் சிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது.  


சிம்பிளா சொல்லணும்னா இது கட்டிப்புடி வைத்தியம். கமல்ஹாசன் செய்த அதே கட்டிப்பிடிதான்.. அதாவது அன்பு, மகிழ்ச்சி, ஆறுதல் என அரவணைப்பில் பல விதமான உணர்ச்சிகளை  வெளிப்படுத்தும் இனிமையான நாள் இன்று..! 




ஆரத் தழுவி கொள்ளும் போது, அன்பே உனக்காக நான் இருக்கிறேன் என்ற நம்பிக்கையூட்டும் உணர்வுகளை வெளிப்படுத்தி ஹக் டேவை கொண்டாடி  வருகின்றனர். அரவணைக்கும்போது அரவணைக்கப்படுபவருக்கு ஒரு ஆறுதல் கிடைக்கிறது, நம்பிக்கை கிடைக்கிறது, பயம் போகிறது, நிம்மதி வருகிறது, தெம்பு கிடைக்கிறது.. நமக்காக, நம்மை அரவணைக்க ஒருவர் இருக்கிறார் என்ற உணர்வே நமக்கு சந்தோஷத்தையும், நிம்மதியையும் தரும் அல்லவா.. அதுதான் இந்த கட்டிப்பிடியின் மகத்துவம்.


அரவணைப்பை பெரும்பாலும் வார்த்தைகளால் அளவிட முடியாது. உணர்ச்சிகளின் வெளிப்பாடாகவே அறிய முடிகிறது. அறிவியல் ரீதியாக காதலன் காதலி இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடிக்கும் போது உடலில் உள்ள ஹார்மோன்களை தூண்டச் செய்து ஆக்ஸிடாசினை வெளியேற்றுகிறது. இதனால் காதலர்கள் இருவருக்குள்ளும்  மகிழ்ச்சியான உணர்வுகள் ஏற்படுகிறது. அப்படி அணைத்துக் கொள்ளும் தருணத்தில் மனம் பரவச மனநிலையை அடைந்து மன அழுத்தத்தைக் குறைக்க, உதவுகிறது. காதலில் எவ்வளவு இடையூறுகள் ஏற்பட்டாலும் அதற்கு ஆறுதல் அளிக்கும் சக்தி அரவணைப்பில் வெளிப்படுகிறது. 


காதலர்கள் மட்டுமல்லாமல் கணவன் மனைவி, அக்கா தங்கை, அப்பா அம்மா, நண்பர்கள் என அனைவரும் அன்பை வெளிப்படுத்த இந்த தினத்தை கடைபிடிக்கலாம், கட்டிப்பிடிக்லாம். இது மட்டுமல்லாமல் கோபம், வெறுப்பு ஏற்படும் போது வார்த்தைகளை மௌனம் ஆக்கி, காதலர்கள் இருவரும் அணைத்து கொண்டால் எப்பேற்ப்பட்ட கோபமும் பறந்து ஓடிப் போகும். மனம் லேசாகிவிடும். அந்த அளவிற்கு அரவணைப்பு கோபம் என்ற நேயை தீர்க்கும் மருந்தாகவே செயல்படுகிறது. அதே சமயத்தில் காதலில் கரம்பிடித்தவர்கள் மட்டுமே ஆரத் தழுவி கொள்ளும்போது அவர்களுக்குள் ஏற்படும் அளவுக்கு மீறிய அன்பின் வெளிப்பாடாகவே கருதப்படுகிறது.


ஒரு வழியா காதலிக்கு பிடித்த சாக்லேட்,டெடி கிப்ட் கொடுத்து ப்ராமிஸ் செய்து காதலில் சக்சஸ் ஆனவர்கள் கட்டிப்பிடி வைத்தியத்தை கடைப்பிடியுங்கள்.. நாளைக்குதான் கிளைமேக்ஸ்.. காத்திருப்போம்.