வைஷாலி ரமேஷ்பாபு அசத்தல்.. இந்தியாவின் 3வது பெண் செஸ் கிராண்ட் மாஸ்டரானார்!

Su.tha Arivalagan
Dec 02, 2023,11:54 AM IST

சென்னை: இந்தியாவின் 3வது பெண் செஸ் கிராண்ட் மாஸ்டராக  உருவெடுத்துள்ளார் வைஷாலி ரமேஷ்பாபு. தமிழ்நாட்டின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டர் என்ற சாதனையையும் அவர் இதன் மூலம் படைத்துள்ளார்.


செஸ் வரலாற்றிலேயே, சகோதர - சகோதரி ஒருவர் ஒரே சமயத்தில் கிராண்ட் மாஸ்டர்களாக இருப்பதும் இதுவே முதல் முறையாகும். வைஷாலியின் தம்பிதான் பிரக்ஞானனந்தா என்பது நினைவிருக்கலாம். உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிப் போட்டியில் விளையாடி சாதனை படைத்தவர் பிரக்ஞானந்தா என்பது குறிப்பிடத்தக்கது.


சனிக்கிழமை நடந்த நான்காவது எல்லாபிரெகட் ஓபன் செஸ் போட்டியின்போது கிராண்ட் மாஸ்டராவதற்கான 2500  புள்ளிகளைத் தாண்டி சாதனை படைத்தார் வைஷாலி. ஒருபக்கம் வைஷாலியும் மறுபக்கம் பிரக்ஞானந்தாவும் அதி வேகமாக செஸ் உலகில் வளர்ந்து வந்தனர். இதில் பிரக்ஞானந்நாவின் வளர்ச்சி சற்று  வேகமாக இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் தற்போது தம்பியைப் போலவே தானும் ஒரு கிராண்ட் மாஸ்டராகி விட்டார் வைஷாலி.




கடந்த 2018ம் ஆண்டு பிரக்ஞானந்தா கிராண்ட் மாஸ்டர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 22 வயதாகும் வைஷாலி,  தனது 15 வயதில் பெண் சர்வதேச மாஸ்டர் ஆனார். 20 வயதில் இன்டர்நேஷனல் மாஸ்டர் ஆனார்.


பிரக்ஞானந்தாவை விட 4 வயது மூத்தவரான வைஷாலிதான் அவரது குடும்பத்தில் முதலில் செஸ் விளையாடியவர்.  இந்தியாவில் இதுவரை கொனேரு ஹம்பி மற்றும் ஹரிகா துரோனவள்ளி ஆகியோர் மட்டுமே பெண் கிராண்மாஸ்டர்களாக உள்ளனர். அதுவும் கடந்த 12 வருடமாக எந்தப் பெண் வீராங்கனையும் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வாங்காமலேயே இருந்து வந்தனர். அந்த காத்திருப்புக்கு முடிவு கட்டியுள்ளார் வைஷாலி.


பிரக்ஞானந்தாவும் - வைஷாலியும் செஸ் விளையாட வந்ததே ஒரு சுவாரஸ்யமான கதைதான்.. எல்லா வீட்டையும் போலவே, எப்போது பார்த்தாலும் டிவியில் மூழ்கிக் கிடந்த குழந்தைகள்தான் வைஷாலியும், பிரக்ஞானந்தாவும். அவரது தாயார் நாகலட்சுமிதான், இருவரையும் இதிலிருந்து மீட்பதற்காக செஸ் பக்கம் மடை மாற்றியுள்ளார். அதன் பிறகு அவர்களது வாழ்க்கையே மாறிப் போனது.. இன்று செஸ்ஸின் மிகப் பெரிய முகங்களாக இருவரும் மாறி நிற்கின்றனர்.


முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து


கிராண்ட் மாஸ்டர் ஆகியுள்ள வைஷாலிக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன. முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், இந்தியாவின் மூன்றாவது பெண் கிராண்ட் மாஸ்டர், தமிழ்நாட்டின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டராகியுள்ள வைஷாலிக்கு எனது வாழ்த்துகள்.




2023ம் ஆண்டு உங்களுக்கு மிகச் சிறந்ததாக அமைந்துள்ளது. உங்களது சகோதரர் பிரக்ஞானந்தாவுடன் இணைந்து செஸ் வரலாற்றில் கிராண்ட் மாஸ்டர்களாக திகழும் சாதனையைப் படைத்துள்ளீர்கள். இருவரும் இணைந்து முதல் முறையாக கேன்டிடேட்ஸ் தொடருக்கும் தகுதி பெற்று சாதனை படைத்துள்ளீர்கள்.


உங்களது சாதனைகளால் நாங்கள் பெருமை அடைகிறோம்.  உங்களது பாராட்டுக்குரிய இந்த  சாதனைப் பயணமானது, சாதனை படைக்கத் துடிக்கும் இளம் செஸ் திறமையாளர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு மிகப் பெரிய முன்னுதாரணமாக இருக்கும் என்று கூறியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.