வியக்க வைத்த "ஆட்டோ டாக்டர்" .. வியந்து போன வைரமுத்து.. நெகிழ்ச்சியுடன் பாராட்டு!

Su.tha Arivalagan
Sep 14, 2023,10:43 AM IST
சென்னை: விழுப்புரத்தைச் சேர்ந்த லூர்துராஜ் என்ற ஆட்டோ ஓட்டுநர் கவிப்பேரரசு வைரமுத்து குறித்த ஆய்வு செய்து சென்னை பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்து டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார். அவரை நேரில் அழைத்து பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவித்தார் வைரமுத்து.

வைரமுத்து பாடல்களைப் பற்றி ஆய்வு செய்து எத்தனையோ பேர் புத்தகம் எழுதியுள்ளனர், டாக்டர் பட்டம் பெற்றுள்ளனர். ஆனால் ஒரு ஆட்டோ டிரைவர், வைரமுத்துவின் பாடல்கள் குறித்து ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றிருப்பது மிகப் பெரிய ஆச்சரியம் மட்டுமல்ல, சாதனையும் கூட.

அவரது பெயர் லூர்துராஜ். ஆட்டோ டிரைவரான லூர்து ராஜ், வைரமுத்துவின்  திரைப்படப் பாடல்கள் குறித்து ஆய்வு செய்து சென்னை பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். இதை அறிந்து லூர்துராஜை நேரில் வரவழைத்து பாராட்டி, பொன்னாடை போர்த்திக் கெளரவித்தார். அவருடன் பேசி மகிழ்ந்தார்.

லூர்துராஜுவுக்கு பொன்னாடை போர்த்திய பின்னர் வைரமுத்து அவரிடம் பேசுகையில்,  பெரிய சாதனை பண்ணிருக்கீங்க. ஆட்டோ ஓட்டுநர் வர்க்கத்திற்கே பெருமை சேத்திருக்கீங்க.  ஒரு வரி சேர்த்துக்கங்க.. நான் இரக்கமுள்ள மனசுக்காரண்டா.. டாக்டர் பட்டம் வாங்கப் போறேன்டா என்று  சேத்துக்கலாம் என்றார்.



பின்னர் அருகில் இருந்தவரிடம் திரும்பி, இவருக்கு உயர் நிலைப் பள்ளியோ, கல்லூரியோ ஒரு இடம் வாங்கிக் கொடுங்க. ஆட்டோ ஓட்டுநர் என்பது குறைந்த பதவி அல்ல இழிவான பதவியும் அல்ல. ஆனால் அவர் வாங்கியுள்ள பட்டத்துக்கு அந்த இடத்துக்குப் போகணும் என்றார் வைரமுத்து.

பின்னர் லூர்துராஜிடம், சங்க இலக்கியம் பரிச்சயம் இருக்கா.. சொற்பொழிவு பண்ணுவீங்களா.. பாடம் சொல்லிக் கொடுக்க முடியுமா என்றெல்லாம் அன்புடன் விசாரித்தார் வைரமுத்து. அப்போது லூர்துராஜ், தான் எட்டு வருடம் ஆசிரியராக பணியாற்றிருப்பபதாகவும், சங்க இலக்கியங்களில் பரிச்சம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பு குறித்து ஒரு டிவீட் போட்டுள்ளார் வைரமுத்து. அதில் அவர் கூறியிருப்பதாவது:

லூர்துராஜ்
ஓர் ஆட்டோ ஓட்டுநர்

‘கவிப்பேரரசு வைரமுத்து
திரைப்பாடல்களில்
புதுக்கவிதைக் கூறுகள்’
என்ற தலைப்பில் ஆய்வுசெய்து
சென்னைப் பல்கலைக்கழகத்தில்
டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார்

வியந்து போனேன்;
வீட்டுக்கழைத்துப்
பாராட்டினேன்

ஆட்டோ ஓட்டுநர்
கூட்டத்தில் ஓர் அதிசயம்

வாழ்த்துகிறேன் என்று அதில் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.