"பொத்தி வச்ச மல்லிக மொட்டு".. 40 வருஷமாச்சு.. மலர்ச்சி அடைந்த வைரமுத்து!

Su.tha Arivalagan
Sep 16, 2023,01:57 PM IST

சென்னை: மண்வாசனை படம் வெளியாகி 40 வருடங்களாகிறது. இந்த நிலையில் அப்படத்தில் இடம் பெற்ற ஒரு அருமையான பாடல் வரிகள் குறித்த சுவாரஸ்யமான விளக்கம் அளித்துள்ளார் கவிஞர் வைரமுத்து.


பாரதிராஜா இயக்கத்தில், இளையராஜா இசையில், வைரமுத்துவின் வைர வரிகளில் உருவான படம்தான் மண்வாசனை. பாண்டியன், ரேவதி, வினுசக்கரவர்த்தி, காந்திமதி என்று பெரும் கலைஞர்களின் நடிப்பில் உருவான பரசவ படம்தான் மண்வாசனை.


1983ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி மண்வாசனை வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. படத்தின் இசையும், கதையும், பாடல்களும், வசனங்களும் மிகப் பிரபலமாக பேசப்பட்டன. பாரதிராஜாவின் இயக்கத்தில் மணி மகுடம் சூட்டிய படங்களில் மண்வாசனைக்கும் தனி இடம் உண்டு.




இப்படத்தில் இடம் பெற்ற பொத்தி வச்ச மல்லிக மொட்டு பாடல் மிகப் பிரபலமானது. அந்தக் காலத்து இளசுகளுக்குப் பரவசம் கொடுத்த பாடல் அது. அந்தப் பாடலில் இடம் பெற்ற சில வரிகள் குறித்து சுவாரஸ்யமாக விளக்கியுள்ளார் கவிஞர் வைரமுத்து.


இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்:


இன்றுடன்

நாற்பது ஆண்டுகள் 

பாரதிராஜாவின்

மண்வாசனை வெளிவந்து


“ஆத்துக்குள்ள நேத்து

ஒன்ன நெனச்சேன்

வெக்கநெறம் போக

மஞ்சக் குளிச்சேன்”என்ற வரியின்

பொருள் புரியாமல்

இன்னும் புகார் வருகிறது


"என் வெட்கத்தின்

சிவப்பு நிறம் பார்த்து

அது ஆசையின் 

அழைப்பென்று கருதி

என் முரட்டு மாமன் 

திருட்டுவேலை செய்துவிடக்கூடாது

அதனால் மஞ்சள் பூசி

என் வெட்கத்தை மறைக்கிறேன்"

என்பது விளக்கம்


இந்த நாற்பது ஆண்டுகளில்

காதலின் விழுமியம் மாறியிருக்கிறது

வெட்கப்பட ஆளுமில்லை

மஞ்சளுக்கும் வேலையில்லை


என்று எழுதியிருக்கிறார் வைரமுத்து.. என்ன வாசகர்களை, கடைசியாக வைரமுத்து சொன்ன வரிகள் உண்மைதானா.. வெட்கப் பட ஆளுமில்லை, மஞ்சளுக்கும் வேலையில்லை என்று அவர் சொன்னது குறித்து நீங்க என்ன நினைக்கறீங்க.. சொல்லுங்களேன் உங்களோட கருத்துக்களை!