"எந்தப் பாம்பும் இவர்களிடமிருந்து தப்பாது".. பத்மஸ்ரீ விருது பெறும் வடிவேல் கோபால் - மாசி சடையன்!

Su.tha Arivalagan
Jan 26, 2023,09:22 AM IST
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த இருளர் சமுதாயத்தைச்  சேர்ந்த வடிவேல் கோபால் - மாசி சடையன் பெயர், இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் கூட பிரபலமானது. இருவரும் பாம்பு பிடிப்பதில் அந்த அளவுக்கு நிபுணர்கள் ஆவர்.



வடிவேல் கோபாலுக்கு 47 வயதாகிறது. அவருடன் இணைந்து பாம்பு பிடிப்பவரான மாசி சடையனுக்கு 45 வயது. இருவரும் பல வகையான பாம்புகளைப் பிடிப்பதில் நிபுணர்கள். அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் மிகவும் அரிதாகி விட்ட பர்மிய பைதான் பாம்புகளைப் பிடித்து அந்த நாடுகளுக்கு அனுப்பி உதவியுள்ளனர். அதேபோல பாம்பு ஆய்வாளர் ரோமுலஸ் விட்டேகர் தலைமையில் அமெரிக்கா சென்று பாம்புகள் இனத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்ட குழுவில் வடிவேல் கோபாலும், மாசி சடையனும் முக்கியமான உறுப்பினர்களாக இடம் பெற்றிருந்தனர் என்பது நினைவிருக்கலாம்.

இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் கூட அறியப்பட்ட நபர்களாக இருவரும் உள்ளனர். இவர்களிடமிருந்து எந்த வகையான விஷப் பாம்பும் தப்ப முடியாது. பாம்புகளிலேயே மிகவும் விஷத்தன்மை கொண்டது ராஜநாகம் என்று இவர்கள் கூறுகிறார்கள்.

தங்களுக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது குறித்து வடிவேல் கோபால் - மாசி சடையன் கூறுகையில், அரசுக்கு எங்களது நன்றி. ரோமுலலஸ் விட்டேகர் குழுவில் இடம் பெற்று நிறைய பாம்புகளைப் பிடித்துள்ளோம். அதன் மூலம்தான் நாங்கள் வெளியுலகுக்குத் தெரிய வந்தோம். அதற்காக அவருக்குத்தான் நாங்கள் நன்றி சொல்ல வேண்டும் என்று கூறினர்.