டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் தமிழகமெங்கும் வெளியான "வாலி".. தியேட்டர்களில் விழாக்கோலம்!

Meenakshi
Feb 26, 2024,05:56 PM IST

சென்னை: இன்றைய நவீன காலத்திற்கு ஏற்ப டிஜிட்டல் தொழில் நட்பத்தில் தமிழகமெங்கும்  வெளியாகி வாலி திரைப்படம் வெற்றி நடை போடுகிறது.


24 வருடங்களுக்குப் பிறகு,  தற்கால ரசிகர்களுக்காக முழுமையாக டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டு, 5.1 சவுண்ட் சிஸ்டத்துடன் வெளியாகி உள்ளது. நந்தினி தேவி பிலிம்ஸ் சார்பில்  K கிருஷ்ணன் காளியப்பன் "வாலி" திரைப்படத்தினை தமிழகமெங்கும் திரையரங்குகளில்  வெளியிட்டுள்ளார்.


சென்னையில் கமலா,  காசி,  ரோகிணி, பிவிஆர் காம்ப்ளக்ஸ், ஏஜிஎஸ் காம்ப்ளக்ஸ், வெற்றி  உட்பட பல திரையரங்குகளில் நேற்று வெளியான  இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது.  தற்போது ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க சென்னை மட்டுமல்லாது செங்கல்பட்டு, திருச்சி என, தமிழகமெங்கும்  இப்படம் வெளியாகி வருகிறது. 




எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் 1999ம் ஆண்டு வெளியாகி வெற்றி நடைபோட்ட திரைப்படம் தான் வாலி. நிக் ஆர்ட்ஸ் தயாரிப்பில்,  நடிகர் அஜித் குமார், சிம்ரன் நடிப்பில் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற திரைப்படம்  வாலி.இயக்குநர் எஸ் ஜே சூர்யாவிற்கும், அஜித்திற்கும் திரை வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த திரைப்படமாகும். எஸ் ஜே சூர்யாவை ஒரு இயக்குநராகத் திரையுலகில் நிலை நிறுத்திய இப்படம். விமர்சகர்களிடமும், ரசிகர்களிடமும் மிகப்பெரிய பாராட்டுகளைக் குவித்து, பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்று தந்தது. 


ஒரு அட்டகாசமான திரில்லர் படத்தைத் தந்திருந்தார் எஸ் ஜே சூர்யா.ஒரு  சிக்கலான கதையை மிகச் சிறப்பான திரைக்கதையாக மாற்றி  உருவாக்கியிருந்தார் இயக்குனர். நடிகர் அஜித் இரு வேடங்களில் நடித்திருந்த இந்த படத்தில், பேச முடியாத அண்ணன் பாத்திரத்தை அத்தனை அட்டகாசமாகத் திரையில் உயிர்ப்பித்திருந்தார்.




அஜீத்தின் அபாரமான நடிப்புக்கு இன்று வரை பெயர் சொல்லும் படமாக , அவருக்கான நடிப்பின் மகுடமாகத் திகழ்கிறது. நடிகை சிம்ரன் உட்பட, படத்தில் பணியாற்றிய அத்தனை பேருக்கும், மிக முக்கியமான திரைப்படமாக இப்படம் அமைந்தது. இப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். பாடல்கள் அத்தனையும் தேனிசைச் சொட்டுக்கள்தான்..!


24 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் வெளியாகியிருக்கும் இப்படத்திற்கு ஒரு புதிய திரைப்படத்திற்கு இணையாக மிகப்பெரிய வரவேற்பு, மீண்டும் கிடைத்து வருகிறது. மேலும் சமீப காலமாக  நடிகர் அஜித்தைத் திரையில் சந்திக்காத ரசிகர்களுக்கு இப்படம் விருந்தாக அமைந்துள்ளது.