உயிர் தமிழுக்கு பார்க்கணுமே.. மெயில் அனுப்பி.. ஸ்பெஷல் ஷோ பார்த்து... பாராட்டிய லைக்கா சுபாஷ்கரன்!

Su.tha Arivalagan
May 12, 2024,11:09 AM IST

சென்னை: இயக்குநர் அமீரின் உயிர் தமிழுக்கு படம் பலரின் பாராட்டுக்களையும், பாசிட்டிவான விமர்சனங்களையும் குவித்து வருகிறது. நம்ம அமீருக்குள் இப்படி ஒரு சூப்பர் பெர்பார்மரா என்று பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் லைக்கா புரடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சுபாஷ்கரனும் இப்படத்தைப் பார்த்து பாராட்டியுள்ளார்.


அமீர் நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ள படம் உயிர் தமிழுக்கு. அரசியல் பின்னணியுடன் கூடிய இப்படம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. அமீரின் நடிப்பும் வெகுவாக பாராட்டப்படுகிறது. இந்த நிலையில், லண்டனில்  உயிர் தமிழுக்கு படம் பார்த்துவிட்டு லைக்கா அதிபர் சுபாஸ்கரன் அமீரின் நடிப்பையும் படத்தையும் பாராட்டியுள்ளார்.




புளூசட்டை மாறன் இயக்கிய ஆன்டி இண்டியன் படத்தை தயாரித்த மூன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ஆதம்பாவா இந்தப்படத்தை தயாரித்துள்ளதுடன் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார்.  அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் இமான் அண்ணாச்சி, சரவண சக்தி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இப்படம் மூலம் வெற்றிகரமாக ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் வித்யாசாகர்.



அரசியல் பின்னணியில் உருவாகி உள்ள இந்த படத்தில் அமீர் கதாநாயகனாக நடித்திருக்கிறார் என்பதால் படம் குறித்து ரிலீசுக்கு முன்பிருந்தே எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. தற்போது படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் ஆதம் பாவாவுக்கு ஒரு இமெயில் வந்துள்ளது. அனுப்பியவர் வேறு யாருமல்ல, லைக்கா நிறுவனத்தின் சுபாஸ்கரன்தான். லண்டனில் 'உயிர் தமிழுக்கு' படத்தை பார்க்க விரும்புவதாக ஆதம்பாவாவிடம் கோரிக்கை வைத்துள்ளார் சுபாஸ்கரன்.




இதனைத் தொடர்ந்து லண்டனில் அவருக்காக சிறப்பு காட்சி ஒன்று திரையிட ஏற்பாடு செய்யப்பட்டது. படம் பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறது என தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்  சுபாஸ்கரன்.  சுபாஸ்கரன் தானாகவே முன்வந்து 'உயிர் தமிழுக்கு' படத்தை பார்க்க விரும்பியதும் படம் பார்த்துவிட்டு பாராட்டியதும் மிகவும் ஆரோக்கியமான விஷயம் என்று கூறினார் படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான ஆதம் பாவா.