உத்திரகாசியில் பரபரப்பான நிமிடங்கள்.. சுரங்கப்பாதையில் சிக்கியவர்களை மீட்க.. டெமோ பார்த்த வீரர்கள்!

Su.tha Arivalagan
Nov 24, 2023,03:50 PM IST

- மஞ்சுளா தேவி


உத்தரகாண்ட்: உத்தரகாண்டில் சுரங்கப் பாதையில் சிக்கியுள்ளவர்களை மீட்கும்போது ஏற்படும் சிக்கல்களை கண்டறிவதற்கு ஏதுவாக சுரங்கப் பாதைக்குள் சிக்கியவர்களை எப்படி மீட்பது என்பது தொடர்பான ஒத்திகையை மீட்புப் படையினர் நிகழ்த்தி வருகின்றனர்.


உத்தரகாண்டில் சுரங்கப்பாதையில் சிக்கி உள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளதாகவும், இன்று மாலை 6 மணிக்கு துளையிடும் பணி நிறைவடைவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


சார்தாம் திட்டத்தின் கீழ்  உத்தரகாசி பகுதியில் சில்க்யாரா- பர்கோட் இடையே 4.5 கிலோமீட்டர் தொலைவிற்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்றது. கடந்த 12ஆம் தேதி சுரங்கப்பாதையில் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.  அப்போது அங்கு வேலை பார்த்த 41 தொழிலாளர்கள் சுரங்கப்பாதைக்குள் சிக்கிக் கொண்டனர். 




இவர்களை மீட்க தொடர்ந்து முயற்சிகள் நடந்து வருகின்றன. தொழிலாளர்களை மீட்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தது. குழாயின் பக்கவாட்டிலும் மேல்பக்கத்திலும் துளையிட்டு குழாய் மூலம் சுரங்கப் பாதைக்குள் இருக்கும் தொழிலாளர்களுக்கு ஆக்சிசனும், உணவுகளும் கொடுக்கப்பட்டு வருகிறது.


மேலும் தொழிலாளர்களை வெளியே கொண்டு வருவதற்கு பிரம்மாண்ட குழாய் பதிக்கப்பட்டது.  அந்த குழாய் பதிப்பதற்கான வெல்டிங் பணிகள் நடைபெற்று வரும் வேளையில்  வியாழன் அன்று துளையிடும்  இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால் மீட்பு பணியில் சிறிது தாமதம் ஏற்பட்டது .


இந்நிலையில் வெள்ளிக்கிழமை அதாவது இன்று காலை 11:30 மணிக்கு துளையிடும் பணி தொடங்கும் என கூறப்பட்ட நிலையில் கான்கிரீட் தளம் சேதமடைந்ததால் மீண்டும் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டது. தற்போது தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் சுரங்கப் பாதைக்குள் சிக்கியவர்களை எப்படி மீட்பது என வீரர்கள் ஒத்திகை பார்த்து வருகின்றனர்.


13 நாட்களாக சுரங்கப் பாதைகள் சிக்கி உள்ள 41 தொழிலாளர்களும் தங்களின் கை கால்களை முடக்கி உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ,அவர்களின் மனநிலை எப்படி இருக்குமோ என தெரியாது. மேலும் அவர்களின் உடலும் மனமும் சோர்வாக தான் இருக்கும். அப்படிப்பட்ட நிலையில் மீட்கும் போது இன்னும் அதிகமாக அவர்களை சோர்வடையச் செய்யாமல் எளிதாக சுரங்கப் பாதையில் இருந்து தொழிலாளர்களை எப்படி வெளியே கொண்டு வர வேண்டும்  என்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


முதலில் குழாயின் உள்ளே ட்ராலி மாதிரியான மீட்பு வாகனம் அனுப்பப்படும். அந்த ட்ராலியின் மீது தொழிலாளர்கள் படுத்தபடி இருக்க, கயிற்றின் மூலம் அந்த டிராலியை இழுத்து வெளியே கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. வெளியே கொண்டு வரப்படும் தொழிலாளர்களுக்கு தகுந்த முதலுதவி சிகிச்சைக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது.


சுரங்கப்பாதைகளில் சிக்கித் தவிக்கும் 41 தொழிலாளர்களும் நல்லபடியாக வெளியே வந்து அவர்களுடன் குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்வதற்கு அனைவரும் பிரார்த்திப்போம்.. நாட்டின் ஒட்டு மொத்த கூட்டு பிரார்த்தனையும் கண்டிப்பாக வெற்றி அடையும் என்று மீட்புப் படையினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.