உத்தரகாண்டா.. கன்னட திரையுலகில் அதிரடியாக என்ட்ரி தரும் நம்ம ஐஸ்வர்யா ராஜேஷ்!

Manjula Devi
Apr 24, 2024,01:45 PM IST

சென்னை: தமிழில் பல வெற்றிப் படங்களில் நடித்து விருதுகளை பெற்ற நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது உத்தரகாண்டா என்ற படத்தின் மூலம் கன்னட மொழியில் அறிமுகமாகிறார்.


தமிழ் மற்றும் மலையாளத்தில் கலக்கிக் கொண்டிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது கன்னடத்திலும் நாயகியாக அறிமுகம் ஆகிறார்.

சின்னத்திரையில் கலக்கப் போவது யாரு என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றியவர் நடிகை ஜஸ்வர்யா ராஜேஷ். இதனைத் தொடர்ந்து கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மாநாட மயிலாட நடன நிகழ்ச்சியில் ஒரு கண்டஸ்டண்டாகவும் பங்கேற்றார். 




இதன் மூலம் கிடைத்த அறிமுகத்தால் பின்னர் 2010 ஆம் ஆண்டு வெளியான நீதானா அவள்  என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானவர். அட்டகத்தி படத்தில் அமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ்பெற்றார். இப்படி தமிழில் தனது நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், மனிதன், காக்கா முட்டை, கனா, தர்மதுரை, நம்ம வீட்டு பிள்ளை, தி கிரேட் இந்தியன் கிச்சன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். 


ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது, கன்னட சூப்பர்ஸ்டார், டாக்டர் சிவராஜ் குமார் நடிப்பில் தயாராகி வரும் உத்தரகாண்டா என்னும் திரைப்படத்தின் மூலம் கன்னட திரை உலகில் அறிமுகமாகிறார். இப்படத்தை கே.ஆர்.ஜி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் கார்த்திக் கவுடா மற்றும் யோகி ஜி ராஜ் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். 


இயக்குனர் ரோகித் பதகி  இப்படத்தை இயக்கியுள்ளார். இதில் சிவராஜ்குமார், தனஞ்சயா, ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகர் விஜய் பாபு, ரங்காயண ரகு, சைத்ரா ஜே .ஆச்சார், உமா ஸ்ரீ , யோகராஜ் பட், கோபாலகிருஷ்ணன் தேஷ் பாண்டே உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் துர்கி என்னும் கதாபாத்திரத்தில் தனஞ்செயாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். 


ஒவ்வொரு மொழியிலும் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ள ஐஸ்வர்யா கன்னடத்திலும் கலக்குவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.