அரசு மருத்துவமனையில்.. முக்காடு போட்டுக் கொண்டு நோயாளி போல  சென்று ஆய்வு செய்த சப் கலெக்டர்!

Meenakshi
Mar 14, 2024,12:24 PM IST
லக்னோ: அரசு சுகாதார மையத்துக்கு முக்காடு போட்டுக்கொண்டு நோயாளி போல் சென்று ஆய்வு செய்துள்ளார் சப் கலெக்டர் கிரித்தி ராஜ். அவரது இந்த அதிரடியான சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திர பிரதேச மாநிலம் பிரோஸாபாத் மாவட்டத்தில் சப் கலெக்டராக இருப்பவர் கிரித்தி ராஜ் என்ற பெண் ஐஏஎஸ் அதிகாரி. இவர் அதிரடிக்குப் பெயர் போனவர். டிடாமாய் என்ற இடத்தில் சுகாதார மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தில் பணி செய்யும் டாக்டர்கள், பிற ஊழியர்கள் ஒழுங்காக பணிசெய்யவில்லை என கிரித்தி ராஜூக்கு புகார்கள் வந்தன. 

இந்த புகாரை அடுத்து கிரித்தி ராஜ் ஒரு நோயாளி போல முக்காடு போட்டுக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு நோயாளிகளுடன் நோயாளியாக கிரித்தி ராஜ் அமர்ந்திருந்தார். மருத்துவர் கிரித்தி ராஜை நோயாளி என நினைத்து அலட்சியமாக பேசியுள்ளார். ஆனால், சிறிது நேரத்தில் கிரித்தி ராஜ் யார் என்பதை அறிந்த மருத்துவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். 




ஆட்சியரின் இந்த அதிரடி சோதனை பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து கிரித்தி ராஜ்  கூறுகையில், நான் முக்காடு போட்டுக்கொண்டு நோயாளி போல் மருத்துவரிடம் சென்றேன். ஆனால் மருத்துவர் நோயாளிகளிடம்  எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமோ அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. வருகைப் பதிவேட்டை நான் சரிபார்த்தபோது ஊழியர்களில் சிலர் பணிக்கு வரவில்லை. வருகை பதிவேட்டில் கையெழுத்து இட்டவர்களில் சிலர் அங்கு இல்லை. 

மருத்துகளை பரிசோதித்த போது பாதி மருந்துகள் காலாவதியாக இருந்தன. நோயாளிகளுக்கு ஊசியும் முறையாக செலுத்தப்படவில்லை. இந்த சேவை குறைபாடு குறித்து விசாரித்து அறிக்கை உத்தரவிட்டுள்ளேன் என்றார். 

கிரித்தி ராஜ் மற்ற நோயாளிகளுடன் மருத்துவமனையில் காத்திருப்பது, மருந்து ஸ்டாக்கை சரி பார்ப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் பரவி வைரலாகி வருகின்றன.

சப் கலெக்டர் கிருத்தி ராஜின் இந்த செயலை சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பாராட்டி தனது சமூக வலைதளப்பக்கத்தில் எழுதியுள்ளார்.