வாழ் நாள் முழுக்க இதுதான் தண்டனை.. இந்திய கிரிக்கெட் அணியை அதிர வைத்த உ.பி. போலீஸ்!

Su.tha Arivalagan
Jun 30, 2024,01:31 PM IST

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணி டி20 உலகக் கோப்பையை வென்றதை விதம் விதமாக கொண்டாடி வருகிறார்கள் இந்தியர்கள். இன்னும் கொண்டாட்டங்கள் முடியவில்லை. பாராட்டுகளுக்கும் ஓய்வில்லை. 


இரண்டாவது டி20 உலகக் கோப்பையை இந்தியா நேற்று அதிரடியாக வென்றது. இது ஒட்டுமொத்தமாக பார்த்தால் இந்தியாவுக்கு 4வது ஐசிசி உலகக் கோப்பையாகும். இதற்கு முன்பு 1983 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் ஒரு நாள் உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. அதேபோல 2008ம் ஆண்டு முதலாவது டி20 உலகக் கோப்பையை தோனி தலைமையில் இந்தியா வென்றது. இப்போது ரோஹித் சர்மா தலைமையில் 2வது டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது.




இந்திய அணிக்கு கிரிக்கெட் ஜாம்பவான்கள், அரசியல் தலைவர்கள், குடியரசுத்  தலைவர், பிரதமர், முதல்வர்கள் என பல தரப்பினரும் பாராட்டுகளைக் குவித்து வருகின்றனர். ரசிகர்கள் நேற்று போட்டி முடிந்ததில் இருந்தே கொண்டாட்டங்களை தொடர்ந்து வருகின்றனர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்றும் கூட பல நகரங்களில் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன.


சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து பதிவுகள் வந்தவண்ணம் உள்ளன. இந்த நிலையில் உத்தரப் பிரதேச காவல்துறை தனது எக்ஸ் பக்கத்தில் போட்டிருந்த பதிவு படு வித்தியாசமாக இருந்தது. அதில், பிரேக்கிங் செய்தி: இந்திய பந்து வீச்சாளர்கள் தென் ஆப்பிரிக்க இதயங்களை உடைத்து விட்டனர். தண்டனை: வாழ்நாள் முழுக்க இந்திய ரசிகர்களின் அன்பை அவர்கள் அனுபவிக்க வேண்டும் என்று கூறி அதிர வைத்து விட்டனர். வேற லெவல் வாழ்த்தா இருக்கே போலீஸ்கார் என்று பலரும் உ.பி. காவல்துறையை பாராட்டி வருகின்றனர்.


நேற்றைய போட்டி முடிவில் கேப்டன் ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்து விட்டனர். கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் திளைத்துள்ள ரசிகர்களுக்கு இது பெரும் ஏமாற்றம்தான், வருத்தம்தான். ஆனால் மிகப் பெரிய சாதனையோடு இருவரும் விடைபெறுவது அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கவே செய்துள்ளது.