மனைவி, 2 குழந்தைகளைக் கொன்று விட்டு.. இறந்த உடல்களுடன்.. 3 இரவுகளைக் கழித்த சைக்கோ கணவர்!

Su.tha Arivalagan
Apr 01, 2024,10:10 AM IST

லக்னோ:  உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் மனைவி, 2 குழந்தைகளைக் கொன்ற நபர், அவர்களின் இறந்த உடல்ககளுக்குப் பக்கத்திலேயே 3 நாட்கள் இருந்துள்ளார். அவரை தற்போது போலீஸார் கைது செய்துள்ளனர்.


அந்த நபரின் பெயர் ராம் லகான். 32 வயதான இவரது மனைவி பெயர் ஜோதி. 30 வயதாகிறது. அவர்களுக்கு 6 வயதில் பாயல், 3 வயதில் ஆனந்த் என இரு குழந்தைகள் உள்ளனர். தனது மனைவிக்கு வேறு ஒருவருடன் கள்ளத் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டார் ராம் லகான். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று தனது மனைவியை துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார் ராம் லகான். அதேபோல தனது இரு குழந்தைகளையும் கூட ஈவு இரக்கம் இல்லாமல் கொலை செய்தார்.




அதன் பிறகு அவர் வழக்கம் போல தனது வேலையைப் பார்க்க ஆரம்பித்துள்ளார். பகல் முழுக்க வேலைக்குப் போய் விடுவார். இரவு வீடு திரும்புவார். இறந்த உடல்களுக்கு அருகேயே படுத்துத் தூங்கியுள்ளார். அவர்கள் இறந்து விட்டதை அவர் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. இப்படியே 3 நாட்கள் கழிந்துள்ளது. 


அவர் வசித்து வந்த வீடு வாடகை வீடாகும். வீட்டிலிருந்து துர்நாற்றம் வெளியாகவே வீட்டு உரிமையாளர் ராம் லகானிடம் என்ன ஏது என்று விசாரித்துள்ளார். ஆனால் அவர் சரியாக பதில் தரவில்லை. இதனால் வீட்டுக்குள் போய் என்ன ஏது என்று வீட்டு உரிமையாளர் பார்த்தபோதுதான் இறந்த உடல்களை கோணியைப் போட்டு ராம் லகான் மூடி வைத்திருந்தது தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தார்.


உடனடியாக அவர் போலீஸாருக்குத் தகவல் தரவே, அவர்கள் விரைந்து வந்து ராம் லகானைப் பிடித்து விசாரித்தனர். அப்போதுதான் நடந்தது தெரிய வந்தது.


இதுகுறித்து  லக்னோ தெற்கு துணை போலீஸ் கமிஷனர் டி.எஸ். சிங் கூறுகையில், ராம் லகானுக்கும், அவரது மனைவிக்கும்  7 வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. சமீப காலமாக இவரது மனைவி மீது இவருக்கு சந்தேகம் வந்துள்ளது. அவருக்கு கள்ளத் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மார்ச் 28ம் தேதியும் இதுபோல தகராறு ஏற்பட்டது. அப்போதுதான் தனது மனைவி, குழந்தைகளைக் கொன்றுள்ளார்  ராம் லகான். அவரைக் கைது செய்துள்ளோம். கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார் என்றார் அவர்.