ஐந்தும் பெண் குழந்தை.. 6வதாக கர்ப்பமான மனைவி.. வயிற்றைக் கிழித்த கணவன்.. அதிர வைத்த காரணம்!

Su.tha Arivalagan
May 24, 2024,04:44 PM IST

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஐந்து பெண் குழந்தைகளை மனைவி பெற்ற நிலையில், 6வது முறையாக அவர் கர்ப்பமானதைத் தொடர்ந்து கருவில் உள்ள சிசு ஆணா, பெண்ணா என்பதை அறிவதற்காக வயிற்றை கத்தியால் அறுத்துள்ளார் ஒரு கொடூரக் கணவர். அவர் மீதான வழக்கை விசாரித்த கோர்ட் தற்போது அந்த முட்டாள் கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது.


2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த சம்பவம் நடந்துள்ளது.  உ.பி. மாநிலம் பதான் என்ற நகரைச் சேர்ந்தவர் பன்னா லால். இவரது மனைவி பெயர் அனிதா. திருமணமாகி 22 வருடங்களாகிறது. இந்தத் தம்பதிக்கு 5 மகள்கள் உள்ளனர். தனக்கு மகன் பெற்றுத் தரவில்லை என்று கூறி அடிக்கடி மனைவியுடன் சண்டை போடுவாராம் பன்னா லால். ஒரு கட்டத்தில் தான் விவாகரத்து செய்யப் போவதாகவும், இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு ஆண் பிள்ளை பெற்றுக் கொள்ளப் போவதாகவும் அனிதாவை மிரட்டி வந்தார் பன்னா லால்.




இந்த நிலையில் அனிதா மீண்டும் கர்ப்பமடைந்தார். சம்பவத்தன்று அனிதாவுடன் ஏதோ ஒரு சண்டையில் இறங்கிய பன்னா லால், அவரது வயிற்றில் வளருவது ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.  சண்டை முற்றியதில், உன்னுடைய வயிற்றைக் கிழித்துப் பார்க்கப் போகிறேன்.. எனக்கு இப்பவே தெரிஞ்சாகணும் என்று கூறி கத்தியை எடுத்துள்ளா். அவரது முட்டாள்தனத்தைப் பார்த்து அதிர்ந்த அனிதா, அவரிடமிருந்து தப்ப முயன்றார். ஆனால் அவரை தடுத்துப் பிடித்த பன்னாலால், வயிற்றில் கத்தியை வைத்து கிழித்து விட்டார். அனிதா 8 மாத கர்ப்பிணியாக இருந்தார் அப்போது.


வலியில் அலறிய அனிதா தெருவில் இறங்கி கத்திக் கொண்டே ஓடினார். அதே பகுதியில் கடை வைத்திருந்த அனிதாவின் சகோதரர் இதைப் பார்த்து பதறிப் போய் ஓடி வந்து அவரை மீட்டார். அனிதாவின் சகோதரர் வருவதைப் பார்த்த பன்னாலால் கத்தியை போட்டு விட்டு தப்பி ஓடி விட்டார். அதன் பின்னர் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் உயிர் பிழைத்து விட்டார்.. ஆனால் அவரது வயிற்றில் வளர்ந்து வந்த சிசு பரிதாபமாக இறந்து போய் விட்டது.. என்ன கொடுமை தெரியுமா.. அந்த சிசு ஒரு ஆண் குழந்தை.. எந்தக் குழந்தை வேண்டும் என்று மனைவியிடம் மிருகத்தனமாக நடந்து கொண்டாரோ, பரிதவித்தாரோ, சண்டை போட்டாரோ அந்த குழந்தையின் சாவுக்கு பன்னாலாலே காரணமாகி விட்டார்.


இந்த வழக்கை விசாரித்த கோர்ட் தற்போது பன்னாலாலுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. ஆத்திரம் அறிவிழக்க வைக்கும், ஆத்திரம் கண்ணை மறைக்கும்.. அதுதான் பன்னாலால் விவகாரத்தில் நடந்துள்ளது.