சாலைகளில் மத ரீதியான நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது.. உ.பி. அரசு தடை

Su.tha Arivalagan
Apr 20, 2023,01:30 PM IST
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் எதிர் வரும் ரம்ஜான், அட்சய திருதியை, பரசுராம் ஜெயந்தி ஆகிய பண்டிகைகளின் போது  சாலைகளில் மத ரீதியான எந்த நிகழ்ச்சியையும் நடத்தக் கூடாது என்று உத்தரப் பிரதேச அரசு தடைவிதித்துள்ளது.

போக்குவரத்தை சீர்குலைக்கும் வகையிலான எந்த நிகழ்வையும் அனுமதிக்க முடியாது என்றும் அரசு அறிவித்துள்ளது.



இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் மத ரீதியான நிகழ்வுகள் உள்ளுக்குள்ளேயேதான் நடத்தப்பட வேண்டும். யாரும் சாலைகளில் எந்த நிகழ்ச்சியையும் நடத்தக் கூடாது. அது அனுமதிக்கப்படக் கூடாது என்று அதில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

எந்தக் காரணத்தைக் கொண்டும் அனுமதிக்கப்பட்ட இடத்தைத் தவிர வேறு எந்த இடத்திலும் மத ரீதியான நிகழ்வுகளை நடத்தக் கூடாது. நடத்த முயன்றால் அதை அனுமதிக்கக் கூடாது. போக்குவரத்து பாதிக்கப்படக் கூடாது. தெருக்கள், சாலைகளில் மத ரீதியிலான நிகழ்வுகளை யாரேனும் நடத்த முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக அரசு அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலான பொய்ச் செய்திகள், துவேஷ செய்திகள் பரவாமல் தடுக்கவும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோன்ற செய்திகள் வந்தால் உஷாராக செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்களின் பாதுகாப்பே முக்கியம். மத விழாக்களால் இவை பாதிக்கப்படக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரம்ஜான், பரசுராம் ஜெயந்தி, அட்சய திருதியை ஆகிய இந்த மூன்று விழாக்களும் ஏப்ரல் 22ம் தேதி கொண்டாடப்படவுள்ளதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை உத்தரப் பிரதேச அரசு எடுத்துள்ளது.