நோ.. ஹெல்மெட் நோ.. பெட்ரோல்.. உ. பி. அரசு அதிரடி உத்தரவு.. போலீஸுக்கும் தகவல் தர உத்தரவு!

Manjula Devi
Jan 13, 2025,12:10 PM IST

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கக்கூடாது என அனைத்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கும் அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.


உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. இங்கு சாலை விபத்துகளால் வருடம் தோறும் 26 ஆயிரம் வரை மக்கள் உயிரிழப்பதாகவும், குறிப்பாக பெரும்பாலானோர் இருசக்கர வாகன ஓட்டிகள் தான் சாலை விபத்தில்  உயிரிழப்பதாகவும் தகவல் வெளியானது.


இந்த தகவலின் அடிப்படையில் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும்  நோக்கோடும், விபத்தை குறைப்பதற்காக இரு சக்கர வாகன ஓட்டிகள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அம்மாநில அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. 




அதில் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கக் கூடாது. அவர்களை திருப்பி அனுப்ப வேண்டும். ஹெல்மெட் அணியாமல் அடிக்கடி வாகன ஓட்டிகள் வந்தால் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் இருசக்கர வாகனத்தில் பின்னால் இருப்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பெட்ரோல் பங்கில் ஹெல்மெட் இல்லை என்றால் பெட்ரோல் இல்லை என்ற வாசகத்துடன் மிகப் பெரிய பேனர் வைக்க வேண்டும்.


அதேபோல ஹெல்மட் அணியாமல் பெட்ரோல் போட வருவோர் குறித்த தகவலை காவல்துறைக்கும் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.


இந்த உத்தரவு முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து காவல்துறை கண்காணிக்க வேண்டும். இந்த உத்தரவை அனைத்து மாவட்ட அதிகாரிகளும் பின்பற்ற வேண்டும். இது தொடர்பாக சமூக வலைதளங்கள், ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்