தலைமுடியை பிச்சுப் பிச்சுத் தின்ற பெண்.. வயிற்றில் 2.5 கிலோ முடி.. ஆபரேஷன் செய்து எடுத்த டாக்டர்கள்!

Manjula Devi
Jun 01, 2024,03:26 PM IST

லக்னோ: கர்ப்ப காலத்தின் போது தலைமுடியை உண்ணும் பழக்கத்திற்கு அடிமையான ஒரு பெண்ணின் வயிற்றிலில் முடியெல்லாம் சேர்ந்து பெரிய கட்டியாக மாறி விட்டது. அவரது வயிற்றிலிருந்து 2.5 கிலோ முடிக் கட்டியை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி உள்ளனர். 


பொதுவாகவே பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது ஏதாவது சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றி கொண்டே இருக்குமாம். சிலருக்கு புளிப்பாக சாப்பிடப் பிடிக்கும், சிலருக்கு காரம் பிடிக்கும்.. சில பெண்களுக்கு சாக்பீஸ், சாம்பல் போன்றவற்றை அதிகம் உண்ணும் பழக்கமும் கர்ப்ப காலத்தில் இருக்குமாம். அதற்குக் காரணம், இயற்கை செய்யும் உடலியல் மாற்றங்கள்தான். 


அந்த வரிசையில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண் எதை சாப்பிடும் பழக்கம் கொண்டுள்ளார் தெரியுமா??.. இதைக் கேட்கும்போது என்னடா குமரேசா ஒரு நியாயம் வேணாமாடா? என்ற வடிவேல் காமெடி தான் ஞாபகம் வருகிறது. அப்படி என்னதான் சாப்பிட்டார் அந்தப் பெண்.. வாங்க படிக்கலாம்.




உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த  25 வயதான அந்தப் பெண் சில நாட்களாக கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். என்ன சாப்பிட்டாலும் உடல்நிலை ஏற்றுக்கொள்ளவில்லை. வாந்தியும், குமட்டலும் அதிகமாக இருந்துள்ளது. இதனால் அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அந்தப் பெண்ணுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. வயிறு வலி நீங்க மருந்துகளும் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் உடலில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் கவலையடைந்த அந்தப் பெண் அருகிலுள்ள சித்ரகூட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். 


அங்குள்ள மருத்துவர்கள் இவரை உடனே  அழைத்துச் சென்று இரைப்பை பகுதியில் ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர்.  அப்போதுதான் அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்தன. வயிற்று வலிக்கான காரணத்தையும் டாக்டர்கள் கண்டுபிடித்தனர். அந்தப் பெண் தனது  கர்ப்ப காலத்தின்போது தனது தலை முடியை உண்ணும் வினோத பழக்கத்திற்கு அடிமையாக இருந்துள்ளார். இது மட்டுமல்லாமல் மற்றவர்களின் தலையில் இருந்த  உதிர்ந்த முடிகளையும் அதிகமாக உண்பாராம்.


குழந்தை பிறப்பிற்கு பின்னர் இந்தப் பழக்கத்தை விட்டு விட்டார். ஆனால் பத்து மாதத்தில் அவர் சாப்பிட்ட முடிகள்தான் அவரது வயிற்றுக்கு உலை வைத்து விட்டன. வாய்க்குள் போய் வயிற்றில் தேங்கிய முடியெல்லாம்  பெரிய கட்டியாக மாறி அவரது வயிற்றில் வலியைக் கொடுத்து விட்டது.  அந்த முடிக் கட்டியை அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் வெளியே எடுத்தனர். சுமார் 45 நிமிடங்கள் போராடி அப்பெண்ணின் வயிற்றில் இருந்த 2.5 கிலோ எடையுள்ள முடி கட்டிகளை அகற்றியுள்ளனர். 


தாய்ப்பால் விற்பனை விவகாரம்.. தமிழ்நாடு முழுவதும் கண்காணிக்க முடிவு!


இப்படியெல்லாம் தயவு செய்து சாப்பிடாதீர்கள். உடம்புக்குப் புறம்பான எதுவும் உடல் நலனைக் கெடுக்கவே செய்யும். தலைமுடியை உண்ணும் பழக்கம் விபரீதமானது, அது உயிரிழப்பு வரை போய் விடக் கூடும் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர்.


நம்ம ஊர்லையெல்லாம் இதுக்குத்தான் புள்ளத்தாச்சி பெண்களுக்கு தாய் வீட்டில் வாய்க்குப் பிடிச்சதையெல்லாம் செஞ்சு கொடுப்பாங்க.. உ.பியில் அந்த மாதிரியெல்லாம் பழக்கம் இல்லை போலும்!