பாஜக.,வுக்கு அதிர்ச்சி கொடுத்த உ.பி., மக்கள்...பெரும் பின்னடைவிற்கு இது தான் காரணம்

Su.tha Arivalagan
Jun 04, 2024,04:04 PM IST

லக்னோ :  லோக்சபா தேர்தலில் உ.பி.,யில் பாஜக.,விற்கு கிடைத்துள்ள பெரும் பின்னடைவு அக்கட்சிக்கு பலத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது.  இதை அவர்கள் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.


2019 லோக்சபா தேர்தலில் உ.பி.,யில் உள்ள 80 தொகுதிகளில் 62 ல் பாஜக வெற்றி பெற்றது. அதன் பிறகு யோகி ஆதித்யநாத் தலைமையில் 2வது முறையாக பாஜக ஆட்சியும் நடந்து வருகிறது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடித்தபோதெல்லாம் உ.பி. மாடலைத்தான் முன்னிறுத்தி அது பிரச்சாரம் செய்யும். பிரதமர் நரேந்திர மோடியே கூட சமீபத்தில் பிரச்சாரத்தின்போது புல்டோசரை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பைத யோகியிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள் என்று கூறியிருந்தார்.


அப்படிப்பட்ட உத்தரப் பிரதேசத்தில்தான் அயோத்தி ராமர் கோவிலும் உள்ளது. இந்தக் கோவிலைத்தான் மிகப் பெரிய அளவில் பாஜக நம்பியிருந்தது. ராமர் காப்பாற்றி விடுவார், உ.பி மக்கள் காப்பாற்றி விடுவார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை பாஜகவுக்கு இருந்தது. ஆனால் தற்போது வெறும் 36 இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருந்து வருகிறது தேசிய ஜனநாயகக் கூட்டணி. 




மறுபக்கம் இந்தியா கூட்டணி அங்கு 43 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பாஜக.,வின் ஸ்மிருதி இராணி, அமேதி தொகுதியில் 77,000 ஓட்டு வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்து வருகிறார்.  கடந்த முறை இதே தொகுதியில்தான் அவர் ராகுல் காந்தியை வீழ்த்தியிருந்தார். தற்போது அவர் வீழ்கிறார்.


பிரதமர் மோடியே, ஓட்டு எண்ணிக்கை துவங்கிய 2 மணி நேரம் வரை பின்னடைவையே சந்தித்து வந்தார். இதுவே பாஜக.,விற்கு பெரும் அதிர்ச்சி கொடுப்பதாக அமைந்தது. அவர்கள் அதிகம் எதிர்பார்த்த பலரும் முன்னிலையில் கூட வரவில்லை என்பது தான் அதிர்ச்சி தரும் விஷயமே. உபி.,யில் பாஜக.,வின் பின்னடைவிற்கு காரணமாக பல அம்சங்கள் கூறப்படுகின்றன.


அயோத்தி ராமர் கோவில் :


1980 களில் இருந்தே அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது என்பது பாஜக.,வின் தேர்தல் வாக்குறுதியாக இருந்து வருகிறது. ஆனால் தற்போது அயோத்தியில் ராமருக்கு பிரம்மாண்ட கோவில் கட்டி முடித்து, திறக்கப்பட்ட பிறகும் கூட அது பாஜக.,விற்கு ஓட்டுக்களாக மாறவில்லை. பாஜக.,வின் ராமர் கோவில் அரசியல் மக்களிடம் எடுபடாமல் போனது. காரணம், இதை வர்த்தக மயமாகவும், அரசியலாகவும் பாஜக மாற்றி விட்டதாக அக்கட்சியினரே பலர் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது.


அகிலேஷ்-ராகுல் கூட்டணி :


2017 ம் ஆண்டு நடந்த உ.பி., தேர்தலில் அகிலேஷ் யாதவ் -ராகுல் காந்தி இடையே மோதல் ஏற்பட்டு, கூட்டணி முறிந்தது. இதனால் 2019 தேர்தலில் பாஜக 302 க்கும் அதிகமான இடங்களை பிடித்து வெற்றி பெற காரணமாக இருந்தது. 7 வருடங்களுக்கு பிறகு தற்போது அகிலேஷ்-ராகுல் மீண்டும் ஒன்றாக இந்தியா கூட்டணியில் இணைந்து போட்டியிட்டால் இந்த முறை உ.பி.,யில் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகள் அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளன.


எடுபடாத மாயாவதி அலை :


கடந்த தேர்தலில் 10 இடங்களை கைப்பற்றிய பகுஜன் சமாஜ் கட்சி, இந்த முறை முன்னிலையில் கூட வரவில்லை. இது மாயாவதி கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. அவரின் பிரசாரமும் எடுபடவில்லை. இந்த முறை பகுஜன் சமாஜ் கட்சிக்கு நான்காவது இடமே கிடைத்துள்ளது. மாறாக மாயாவதியின் வாக்கு வங்கி அப்படியே காங்கிரஸ் பக்கம் போய் விட்டதாக சொல்கிறார்கள்.


விவசாயிகள் அதிருப்தி :


சமீபத்தில் பாஜக.,வால் உ.பி.,யில் நிறைவேற்றப்பட்ட விவசாய சட்டத்தால் அம்மாநில விவசாயிகள் (பெரும்பாலானவர்கள் ஜாட் சமூத்தவர்கள்) பாஜக மீது கடும் அதிருப்தியில் உள்ளதையே இந்த தேர்தல் வெளிக்காட்டி உள்ளது. அகிலேஷ் யாதவும் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில் விவசாய சட்டம் குறித்த பிரச்சாரத்தை அழுத்தமாக முன் வைத்தார்.


உ.பி. மொத்தமும் நம்முடனேயே இருக்கும் என்ற அசைக்க முடியாத பாஜகவின் நம்பிக்கையை அந்த மாநில மக்களே அசைத்து விட்டதுதான் பாஜக சற்றும் எதிர்பாராத அதிர்ச்சி சம்பவமாகும்.


உத்தரப் பிரதேசத்தில் 1991 லோக்சபா தேர்தலில் முதல் முறையாக 51 இடங்களைப் பெற்றது பாஜக. அதன் பிறகு அக்கட்சி தொடர்ந்து அதிக இடங்களை வென்று வந்தது. 96ல் 52, 98ல் 59, 99ல் 29, 2014ல் 71, 2019ல் 62 என்று பெற்று வந்த பாஜக தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு உ.பியில் பெரும் சரிவைச் சந்தித்திருக்கிறது.