வந்தாரு "காய் செனட்".. ஒரே கலவரம்.. "நியூயார்க் சமஸ்தானமே" ஆடிப் போய்ருச்சு!

Su.tha Arivalagan
Aug 06, 2023,12:51 PM IST
நியூயார்க்: அமெரிக்காவை அலற வைத்துள்ளார் காய் செனட்.. ஏன் என்னாச்சு?.. நியூயார்க்கில் ஒரு பெரிய கலவரமே மூள இந்த காய் செனட் காரணமாக அமைந்து விட்டார். இதையடுத்து அவரைப் பிடித்துக் கொண்டு  போனது போலீஸ்.

ஒட்டுமொத்த அமெரிக்காவையும் தன் பக்கம் திரும்ப வைத்து விட்டார் இந்த காய் செனட்.

யாரு சாமி இவரு?

சாதாரண யூடியூபர்தான் இந்த காய் செனட். இவர் யூடியூப் மட்டுமல்லாமல் டிவிட்ச் என்ற இன்னொரு சமூக வலைதளத்திலும் பிரபலமாக உள்ளார். இவரது பாடல்கள், நடனத்துக்கு வெறித்தனமான ரசிகர்கள் உள்ளனர். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு 50 லட்சம் பாலோயர்கள் உள்ளனர் என்றால் பார்த்துக்கங்களேன். இவர் நியூயார்க்கின் முக்கியப் பகுதியான யூனியன் ஸ்கொயர் பகுதியில் தனது கூட்டாளியான பானும் என்பவருடன் இணைந்து தோன்றப் போவதாகவும், தனது ரசிகர்களுக்கு பிளேஸ்டேஷன் பரிசளிக்கப் போவதாகவும் ஒரு அறிவிப்பு வெளியிட்டார்.



அவ்வளவுதான் அந்த இடத்தில் ஏராளமான இளைஞர்கள், அவர்களில் பெரும்பாலானவர்கள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் ஆவர், குவிந்து விட்டனர். திடீரென நூற்றுக்கணக்கானோர் குவிந்ததால் அந்த இடமே ஸ்தம்பித்துப் போனது. திடீரென அந்தக் கூட்டத்தினரிடையே கலாட்டா ஏற்பட்டு ஒருவருக்கொருவர் மோதிக் கொள்ளத் தொடங்கினர். அங்கிருந்த சாலைத் தடுப்புகளை அடித்து நொறுக்கினர். கார்கள் மீது ஏறி நின்று வெறித்தனமாக ஆடினர். கார்களைத் தாக்கி உடைத்தனர். கடைகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

அந்த இடமே பெரும் கலவர பூமியானது. இந்த அமளி துமளிக்கு மத்தியில் காய் செனட் அங்கு வந்தார். அவரது காரையும் கூட்டத்தினர் விடவில்லை. காரை நிறுத்தி அதன் மீதும் ஏறி ஆட்டம் போட்டனர். காய் செனட் அந்தக் கூட்டத்தினர் மத்தியில் சிக்கிக் கொண்டார். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். இப்படி ஒரு சந்திப்பு நடப்பதே போலீஸாருக்குத் தெரியாது. இதையடுத்து கலவரத் தடுப்புப் போலீஸார் வரவழைக்கப்பட்டு அனைவரும் அடித்து விரட்டப்பட்டனர்.



எல்லாக் கலவரத்துக்கும் காரணமான காய் செனட்டையும் போலீஸார் அங்கிருந்து அப்புறப்படுத்தி பிடித்துச் சென்றனர். அவர் மீது தற்போது போலீஸார் வழக்குத் தொடர்ந்துள்ளனர். அனுமதி இல்லாமல் பொது இடத்தில் கூட்டம் கூட்டி கலவரத்தை ஏற்படுத்தியதாக அவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

இந்த கலவரத்தில் 12 பேர் காயமடைந்தனர். 65 பேரை போலீஸார் கைது செய்தனர்.  இதில் 30க்கும் மேற்பட்டோர் இளம் வயதினர் என்பது குறிப்பிடத்தக்கது.




இந்த வன்முறை வெறியாட்டத்தை நியூயார்க் மேயர் எரிஸ் ஆடம்ஸ் கடுமையாக கண்டித்துள்ளார். இதுபோன்று சட்டவிரோதமாக கூடுவது மிக மிக தவறு, அதிலும் கலவரத்தை ஏற்படுத்துவது மன்னிக்க முடியாதது என்று அவர் சாடியுள்ளார். இவரது மகனுமே காய் செனட்டின் வெறித்தனமான ரசிகராம். அவருக்கும் சேர்த்து ஆடம்ஸ் அறிவுரை கூறியுள்ளார்.

காய் செனட் அன் கோவைப் பார்த்து இப்போது அமெரிக்கர்கள் கேட்டுக் கொண்டிருக்கும் கேள்வி இதுதான்... "யார்ரா நீங்கெல்லாம்"!!