வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட.. ரோஜா முத்தையா நூலகத்திற்கு அமெரிக்க தமிழர்கள்.. 35000 டாலர்கள் நிதியுதவி

Su.tha Arivalagan
Oct 12, 2024,05:16 PM IST

சென்னை: சென்னையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  ரோஜா முத்தையா நூலகத்திற்கு அமெரிக்கா வாழ் தமிழர்கள் இணைந்து 35,000 அமெரிக்க டாலர்கள் நிதியுதவி அளித்துள்ளனர்.


அமெரிக்காவில் உள்ள சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் 14வது நிதித் திரட்டு நிகழ்ச்சி டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள பிரிஸ்கோ நகரில் சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வின்போது பல்வேறு தமிழ் அமைப்புகள், நிறுவனங்களுக்கு நிதி திரட்டப்பட்டு உதவி அளிக்கப்பட்டது.


அந்த வகையில், சென்னையில் இயங்கி வரும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் புதிய கட்டிடத்திற்காக 35 ஆயிரத்து 175 டாலர்கள் நிதியுதவி வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு ஏற்பட்ட சென்னை பெரு வெள்ளத்தின்போது ரோஜா முத்தையா நூலகத்திற்குள் வெள்ளம் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து புதிய கட்டடம் கட்டுவதற்காக இந்த நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.




இவை தவிர மேலும் பல்வேறு அமைப்புகளுக்கும் இந்த விழாவின்போது உதவிகள் அறிவிக்கப்பட்டன. அவற்றின் விவரம்:


உதவும் கரங்கள் அமைப்பிற்கு 15 ஆயிரம் டாலர்கள், சாய் அஷ்ரயா தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை திட்டத்திற்கு 25 ஆயிரம் டாலர்கள், வடக்கு டெக்சாஸ் உணவு வங்கிக்கு 20 ஆயிரம் டாலர்கள் நிதியுதவி அளிக்கப்பட்டது.


விழாவில் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏர்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது நிழல் நாட்டிய நாடகம்தான். அன்னம் சரவணன் இயக்கத்தில் இந்த நாட்டிய நாடகம் நடைபெற்றது. அதேபோல ராஜேஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவான ஓலைச்சுவடியிலிருந்து இணையம் வரை நாடகம் தமிழ் மொழியின் தொன்மையையும், நவீன உலகத்திற்கேற்ப தன்னை புதுப்பித்துக் கொள்ளும் புதுமையையும் பறை சாற்றுவதாக இருந்தது.


ஹேமா ஞானவேல் இயக்கி வடிவமைத்திருந்த திக்கெட்டும் பரவட்டும் திருக்குறள் என்ற நடன நிகழ்ச்சியும் அசத்தலாக இருந்தது. கிட்டத்தட்ட 70 சிறார்கள் இதில் கலந்து கொண்டு அனைவரையும் மகிழ்வித்தனர். 




வடக்கு டெக்சாஸ் உணவு வங்கி மூலம் ஒரு மில்லியன் பேருக்கு உணவு வழங்கும் திட்டத்திற்காக சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் சார்பில் ஒரு லட்சம் டாலர்கள் நிதியுதவி உறுதியளிக்கப்பட்டிருந்தது. மூன்றாவது கட்டமாக இந்த ஆண்டு 20 ஆயிரம் டாலர்கள் வழஙகப்பட்டுள்ளதாக நிகழ்ச்சியின்போது வேலு ராமன் தெரிவித்தார்.


நிதியளிப்பு விவரங்களையும் தொடர்புடைய திட்டங்களையும் ரம்யா வேலு எலாவர்த்தி எடுத்துரைத்தார். நிகழ்ச்சிகளை ராதிகா தொகுத்து வழங்கினார். வேலு ராமன், விசாலாட்சி வேலு நன்றியுரை ஆற்றினார்கள்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்