அமெரிக்காவில் பயங்கரம்.. கண்மூடித்தனமாக சுட்ட நபர்களால் விபரீதம்.. ஒருவர் பலி.. பலர் காயம்

Su.tha Arivalagan
Feb 15, 2024,10:37 AM IST

கான்சாஸ் சிட்டி: அமெரிக்காவின் கான்சாஸ் சிட்டியில் நடந்த சூப்பர் பவுல் வெற்றிக் கொண்டாட்ட பேரணியின்போது மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக சுட்டதில் ஒருவர் பலியானார். ஏராளமான குழந்தைகள் உள்பட 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.


கான்சாஸ் சிட்டியில் உள்ள மெர்சி மருத்துவமனையில் காயமடைந்தோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 11 பேர் குழந்தைகள் ஆவர். இதில் 9 பேருக்கு துப்பாக்கிக் குண்டு பாய்நத காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர். ஏன் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. 


காயமடைந்த பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். எட்டு பேரின் நிலை மோசமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.




வெற்றிக் கொண்டாட்ட பேரணி அமைதியாகத்தான் நடந்து கொண்டிருந்தது. திடீரென உள்ளே புகுந்த மர்ம நபர்கள் சரமாரியாக சுட்டதால் கூட்டத்தினர் அதிர்ச்சி அடைந்து, சிதறி ஓடினர். அந்த இடமே போர்க்களம்  போல மாறிக் காணப்பட்டது.


சம்பவம் நடந்தபோது அந்த இடத்தில் கான்சாஸ் சிட்டி மேயர் குவின்டன் லூகாஸ் உள்ளிட்ட விஐபிக்களும் இருந்தனர். அவர்கள் பாதுகாப்பான இடங்களைத் தேடி ஓடியதைக் காண முடிந்தது. துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்களில் ஒருவரை பால் கான்டிராஸ் என்பவர் பாய்ந்து பிடித்து தடுத்து கீழே தள்ளி அந்த நபரின் கையில் இருந்த துப்பாக்கியைப் பிடித்தார். அருகில் இருந்தவர்களும் அவர் தப்பி விடாமல் தடுத்து அமுக்கி விட்டனர். இதனால் மேலும் விபரீதம் குறைய வாய்ப்பு ஏற்பட்டது.


இந்த துயரச் சம்பவத்தை வாழ்நாளில் மறக்க முடியாது என்று மேயர் லூகாஸ் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.