விஷ ஊசி போடும்போது..  ரத்த நாளம் சிக்கலை.. ஜஸ்ட் மிஸ்.. தப்பிப் பிழைத்த மரண தண்டனைக் கைதி!

Su.tha Arivalagan
Feb 29, 2024,07:22 PM IST

வாஷிங்டன்: அமெரிக்காவில் மரண தண்டனை விதிக்கப்படும் கைதிகளுக்கு விஷ ஊசி போட்டுத்தான் மரணிக்க வைப்பார்கள். அப்படி ஒரு கைதிக்கு விஷ ஊசி போடுவதற்காக கையில் ரத்த நாளத்தைத் தேடியபோது அது சிக்காததால் வேறு வழியில்லாமல் தண்டனையை தள்ளி வைத்து விட்டார்கள்.


அமெரிக்காவில் இன்னும் கூட மரண தண்டனை உள்ளது. அங்கு விஷ ஊசி போட்டோ அல்லது உயிரைக் கொல்லும் விஷ வாயு செலுத்தியோதான் மரண தண்டனை நிறைவேற்றப்படும். நம்ம ஊரைப் போல தூக்கில் எல்லாம் போட மாட்டார்கள்.


இந்த நிலையில் தாமஸ் கிரீச் என்ற 73 வயது மரண தண்டனைக் கைதி தற்காலிகமாக மரணத்திலிருந்து தப்பித்துள்ளார். அவரது உயிரை, அவரது ரத்தநாளமே தற்காலிகமாக காப்பாற்றிக் கொடுத்திருக்கிறது.


சீரியல் கில்லர் கிரீச்




மரண தண்டனை விதிக்கப்பட்ட கிரீச் கடந்த 40 வருடமாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இடாஹோ சிறையில் இவர் அடைக்கப்பட்டுள்ளார். இவர் 5 பேரை அடுத்தடுத்துக் கொலை செய்த குற்றத்திற்காக இவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில்தான் இவர் மேலும் 12 பேரைக் கொலை செய்தது தெரிய வந்து போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.


இதையடுத்து இவருக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 1981ம் ஆண்டு சிறையில் தன்னுடன் தங்கியிருந்த சக கைதியையும் இவர் மின்சார ஷாக் கொடுத்துக் கொலை செய்து அனைவரையும் அதிர வைத்தார். 


இந்த நிலையில்தான் அவருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற நாள் குறிக்கப்பட்டது. கடந்த 12 வருடங்களில் இடாஹோ சிறையில் எந்தக் கைதிக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை. இதனால் கிரீச்சின் தண்டனை குறித்து பரபரப்பு நிலவி வந்தது.


தண்டனை தினத்தன்று கிரீச்  மரண தண்டனை நிறைவேற்றப்படும் சேம்பருக்கு வரவழைக்கப்பட்டு அவரைப் படுக்க வைத்தனர். பின்னர் அவரது கைகளில் விஷ ஊசி போடும் நேரம் வந்தது. ஊசி போடுவதற்காக ரத்த நாளத்தைத் தேடியபோது அது கிடைக்கவில்லை. நீண்ட நேரமாக ரத்த நாளத்தைத் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் டாக்டர்கள் திணறிப் போய் விட்டார்கள்.


எட்டுமுறை ரத்த நாளத்தைத் தேடியும் கிடைக்கவில்லை. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த முயற்சிகள் தொடர்ந்தன. இதனால் தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டது.  டாக்டர்கள் ஊசி போட முடியாமல் திணறிக் கொண்டிருந்ததை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாராம் கிரீச். டாக்டர்கள் அவரிடம், உங்களுக்கு ஏதாவது செய்கிறதா என்று கேட்டபோது, கால் மட்டும் லேசாக வலிப்பதாக கூறியுள்ளார்.


மரண தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாக அவரிடம் கூறப்பட்டபோது அவர் எதுவும் கூறவில்லையாம். அமைதியாக இருந்தாராம். அதேசமயம், அவரது முகத்தில் சற்று நிம்மதி தெரிந்ததாக உடன் இருந்த சாட்சிகள் தெரிவித்துள்ளனர்.


அமெரிக்காவில் சமீப காலமாக மரண தண்டனைகள் அதிக அளவில் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. கடந்த ஜனவரி மாதம் ஸ்மித் என்ற கைதி நைட்ரஜன் கேஸ் மூலம்  தண்டனைக்குட்படுத்தப்பட்டார். அவருக்கும் முதலில் விஷ ஊசிதான் போட முயன்றார்கள். அது சரியாக வராததால் விஷ வாயு செலுத்தி கொல்லப்பட்டார் என்பது நினைவிருக்கலாம். 


விஷ ஊசி போட்டுக் கொல்வதில் பல நடைமுறைச் சிக்கல்கள் தொடர்ந்து வருவதால் மரண தண்டனை முறை குறித்து மறு ஆய்வு செய்ய இதுதொடர்பான அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதில் உள்ள சிக்கலை சரி செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.


அமெரிக்காவில் 23 மாகாணங்களில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், அரிஸோனா, கலிபோர்னியா, ஓஹையோ, ஓரிகான், பென்சில்வேனியா, டென்னஸ்ஸி மாகாணங்களில் தற்காலிகமாக அதை நிறுத்தி வைத்து அந்த மாகாண ஆளுநர்கள் உத்தரவிட்டுள்ளனர். மற்ற மாகாணங்களில் இதுதொடர்கிறது.


கடந்த ஆண்டு 24 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அனைவரும் விஷ ஊசி போட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.