கமலா ஹாரிஸ் புத்திசாலிப் பெண்.. என் மகளைப் பார்த்து பெருமையா இருக்கு.. சித்தி புளகாங்கிதம்!

Su.tha Arivalagan
Aug 24, 2024,08:35 AM IST

சென்னை: கமலா ஹாரிஸ் மிகவும் புத்திசாலித்தனமான, சிந்தனை நிரம்பிய பெண், அருமையான பெண். என் மகளைப் பார்த்து நான் பெருமை அடைகிறேன் என்று அவரது சித்தி சரளா கோபாலன் கூறியுள்ளார்.


தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர்தான் கமலா ஹாரிஸின் தாயார் ஷியாமளா கோபாலன். காவிரிக் கரையோரம் துளசேந்திரபுரம் கிராமத்தில் பிறந்தவர். படிப்புக்காக அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்தவர் அங்கேயே திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். அவரது கணவர் கருப்பர் இனத்தவர் ஆவார். கமலா ஹாரிஸ் இப்போது தனது வாழ்க்கையின் மிகப் பெரிய உச்சகட்டப் பகுதிக்கு வந்து நிற்கிறார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளராக அவர் முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளார். 


சித்தின்னு பாசமா கூப்பிடுவார்: இதுதொடர்பாக ஷியாமளா கோபாலனின் தங்கையும், கமலா ஹாரிஸின் சித்தியுமான டாக்டர் சரளா கோபாலன் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். சென்னையில் வசித்து வரும் அவர் கமலா ஹாரிஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது குறித்து என்டிடிவிக்கு அளித்த பேட்டியின்போது கூறுகையில், எனது மகளை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். அவர் புத்திசாலி, சிந்தனையாளர், அருமையான பெண். என்னையும் எனது தங்கையையும் கமலா எப்போதுமே சித்தி என்றுதான் பாசத்தோடு கூப்பிடுவார். 


வாட்ச்சைக் கழற்றிக் கொடுத்துட்டார்: துணை அதிபராக அவர் பதவியேற்ற போது கூட என்னைப் பற்றியும், எனது சகோதரர் குறித்தும் குறிப்பிட்டிருந்தார்.  ஒருமுறை சண்டிகரில் நாங்கள் வசித்தபோது எங்களைப் பார்க்க வந்திருந்தபோது அவர் கட்டியிருந்த வாட்ச்சைப் பார்த்து இது நல்லாருக்கே என்று கூறியதும் சட்டென யோசிக்காமல் தனது வாட்ச்சை கழற்றி எனது கையில் மாட்டி விட்டு விட்டார். அது தங்க இழையுடன் கூடிய வாட்ச். உங்களுக்குப் பிடிச்சிருக்கா, வச்சுக்கங்க சித்தி என்று வாஞ்சையுடன் கூறினார். அப்படிப்பட்ட மனதுடையவர்.




எங்க அப்பா முற்போக்கானவர்: எங்க அக்கா ஷியாமளா அமெரிக்கா போகக் காரணமே எங்களோட அப்பா கோபாலன்தான். அவர்தான் தைரியமாக அனுப்பி வைத்தார். நீ போய் படி என்று ஊக்கம் கொடுத்தார். அமெரிக்க புல்பிரைட் ஸ்காலர்ஷிப்பில் எனது சகோதரி அமெரிக்கா சென்று படித்தார். எது சரியோ அதையே செய்வார். துணிச்சலாக செய்வார். தனது பிள்ளைகளுக்கும் அதையே கற்றுக் கொடுத்தார்.


தமிழ் கொஞ்சம் கொஞ்சம் தெரியும்: கமலாவுக்கு தமிழில் கொஞ்சம் வார்த்தைகள்தான் தெரியும். ஆனால் நம்ம ஊர் சாப்பாடு எல்லாமே தெரியும். எல்லாமே அத்துப்படி. எல்லாமே அவருக்குப் பிடிக்கும். எனது தங்கை மகாலட்சுமி கனடாவில் வசிக்கிறார். அவர் எப்போதெல்லாம் அமெரிக்கா போகிறாரோ அப்போதெல்லாம் நம்ம ஊர் சாப்பாட்டை செய்து தரச் சொல்லி சாப்பிடுவார். முடிந்ததை ஃபிரிட்ஜில் ஸ்டாக்கும் வைத்துக் கொள்வார். கமலா மட்டுமல்ல, அவரது மொத்தக் குடும்பத்துக்குமே இந்திய சாப்பாடு என்றால் ரொம்பப் பிடிக்கும்.




கமலாவின் இதயத்தில் இந்தியா: என்னதான் அமெரிக்கராக இருந்தாலும் கூட, கமலா ஹாரிஸின் இதயத்தில் நம்ம ஊரும் தனி இடம் பிடிச்சிருக்கு. அதுக்கு தனி மதிப்பு வைத்திருக்கிறார். இந்தியா மீது தனிப் பாசம் வைத்திருக்கிறார். நம்ம பிரதமர் மோடி, கமலாவுக்கு ஒரு பரிசு கொடுத்திருந்தார். அதை பொக்கிஷம் போல பாதுகாத்து வருகிறார் கமலா. அது என்னன்னா, எனது தந்தை மத்திய அரசுப் பணியில், அதாவது இணைச் செயலாளராக இருந்தபோது, அயல்நாட்டுப் பணியாக ஜாம்பியாவில் வேலை பார்த்தார்.  அப்போது அவர் தொடர்பான நியமன உத்தரவு தொடர்பான புகைப்படத்தை பிரேம் போட்டு கமலா ஹாரிஸிடம் கொடுத்துள்ளார் பிரதமர். தனது தாத்தா குறித்த ஆவணம் என்பதால் அதை பொக்கிஷம் போல பாவித்து பத்திரமாக வைத்திருக்கிறார் கமலா.  வழக்கமாக அமெரிக்க அரசுப் பதவியில் உள்ளவர்களுக்கு கிப்ட் வந்தால் அதை அரசுக்கே அனுப்பி விடுவார்கள். ஆனால் இதை கமலாவே வைத்துக் கொள்ள அனுமதித்துள்ளனர்.


பெசன்ட் நகர் வாக்கிங்: அவர் சிறுமியாக இருந்தபோது எனது அப்பா, அவரை அழைத்துக் கொண்டு பெசன்ட் நகரில் வாக்கிங் போவார். கமலாவை நான் கடைசியாக பார்த்தது 2022ம் ஆண்டுதான். துணை அதிபராக ஆன பிறகு நான் அமெரிக்கா சென்று அவரது வீட்டில் தங்கினேன். நாலைந்து நாட்கள் இருந்தேன். மிகவும் சந்தோஷமாக இருந்தது.  அவரது அலுவலகத்திற்கும் கூட போயிருந்தேன். அதிபரின் அலுவலகத்திற்கும் கூட அவர் என்னைக் கூட்டிக் கொண்டு போய் காண்பித்தார். மறக்க முடியாத அனுபவம் அது என்றார் சரளா கோபாலன். 




கமலா ஹாரிஸ் நெகிழ்ச்சி: நேற்றைய ஜனநாயகக் கட்சி மாநாட்டில் பேசியபோது தனது தாயார் ஷியாமளா குறித்து நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் கமலா ஹாரிஸ். 5 அடி உயரம் கொண்ட எனது அம்மா, தைரியத்திலும் தன்னம்பிக்கையிலும் மிகவும் உயர்ந்தவர். இந்தியாவிலிருந்து கலிபோர்னியாவுக்கு ஒரு விஞ்ஞானியாக வேண்டும், புற்றுநோயாளிகளுக்கு நல்ல சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற கனவுகளுடன் அவர் வந்தபோது 19 வயதுதான். அவர் எங்களுக்கு அவர் சொன்ன மிகப் பெரிய அறிவுரை என்னவென்றால், அநீதி கண்டு புகார் சொல்லாதே.. மாறாக அதை சரி செய்ய பாடுபடு என்பதுதான் என்றார் கமலா ஹாரிஸ்.


சொந்த ஊரில் உற்சாகம்: இதற்கிடையே, கமலா ஹாரிஸின் பூர்வீக ஊரான துளசேந்திரபுரம் மக்கள் அவர் அதிபராக வெற்றி பெற வேண்டும் என்று வேண்டி கோவில்களில்  வழிபாடு செய்வதும், ஊர் முழுக்க கட் அவுட் வைப்பது என்றும் அமர்க்களப்படுத்தி வருகின்றனர். கமலா ஹாரிஸ் அதிபரானால், துளசேந்திரபுரம் உலகப் புகழ் பெறும் என்றும் அவர்கள் மகிழ்ச்சியுடன் சொல்கிறார்கள்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்