நான் நல்லாருக்கேன்.. ஓட மாட்டேன்.. துப்பாக்கிச் சூட்டிலிருந்து தப்பிய டொனால்ட் டிரம்ப் ஆவேசம்!

Su.tha Arivalagan
Jul 14, 2024,09:41 AM IST

பட்லர்/பென்சில்வேனியா/அமெரிக்கா: அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தின் பட்லர் நகரில் நடந்த கூட்டத்தின்போது மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் காயமடைந்தார். இருப்பினும் அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தான் நலமுடன் இருப்பதாகவும், பயந்து ஓட மாட்டேன் என்றும் டிரம்ப் ஆவேசமாக கூறியுள்ளார்.


உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை இந்த சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. நவம்பர் 5ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.  தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் டிரம்ப் போட்டியிடுகிறார். சமீபத்தில் அவருக்கும் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் அதிபர் ஜோ பைடனுக்கும் இடையிலான டிபேட்டுகளிலும் கூட டிரம்ப் ஸ்கோர் செய்திருந்தார். இந்த நிலையில்தான் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.


பட்லர் நகரில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் டிரம்ப் பேசினார். பெருமளவில்  கூட்டம் திரண்டிருந்தது. பல்வேறு தொலைக்காட்சிகளில் இது நேரலையாகவும் ஒளிபரப்பப்பட்டது. இந்த நிலையில் திடீரென யாரோ ஒரு மர்ம நபர் டிரம்ப்பை நோக்கி சரமாரியாக சுட ஆரம்பித்தார். முதல் குண்டு டிரம்ப் காதைக் கிழித்துக் கொண்டு பாய்ந்தது. இதைப் பார்த்த அவர் டக்கென கீழே குணிந்து உயிர் தப்பினார். அக்கம் பக்கத்தில் இருந்தோரும் குணிந்து கீழே அமர்ந்தனர். 




துப்பாக்கிச் சூட்டையடுத்து பாதுகாவலர்களும், அதிரடிப்படையினரும் அந்த மர்ம நபரை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர். அதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார். டிரம்ப் காதில் ரத்தம் கொட்டியது. அப்படியும் அவர் காதைக் கைகளால் பிடித்தபடி யாரும் பயப்படாதீர்கள். தைரியமாக இருங்கள் என்று முழக்கமிட்டார். பின்னர் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இருப்பினும் இந்த சம்பவத்தின்போது துப்பாக்கிக் குண்டு பாய்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.


தான் துப்பாக்கியால் சுடப்பட்டது குறித்து டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் கூறுகையில், என் மீது துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. காதைத் துளைத்துக் கொண்டு குண்டு பாய்ந்தது. எனது வலது காதின் மேல் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.  துப்பாக்கிச் சூடு நடந்ததுமே என்னவோ நடக்கிறது என்பதை உணர்ந்து விட்டேன். எனது காதுப் பகுதியில் விஸ்ஸென்று குண்டு பாய்ந்து சென்ற சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து சரமாரியாக சுடப்பட்ட சப்தம் கேட்டது.  நான் நலமாக இருக்கிறேன். இதுபோன்ற செயல்களுக்கெல்லாம் பயந்து ஓட மாட்டேன் என்று கூறியுள்ளார் டிரம்ப்.


இன்னும் 2 நாட்களில் மில்வாக்கி நகரில் குடியரசுக் கட்சியின் தேசிய மாநாடு நடைபெறவுள்ளது. அதில், டிரம்ப்பை வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


அதிபர் பைடன் - பிரதமர் மோடி கண்டனம்




டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட செயலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


டிரம்ப் உயிருக்கு ஆபத்து இருப்பதாலும், அவர் குடியரசுக் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்படவுள்ளதாலும், அவருக்கான செல்வாக்கு அதிகரித்து வருவதாலும் அவருக்கு அளிக்கப்பட்டு வந்த ரகசிய போலீஸ் பாதுகாப்பு சமீபத்தில்தான் அதிகரிக்கப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.