தப்பு பண்ணாதீங்க.. பெரிய சிக்கலாய்டும்.. ஈரானை எச்சரிக்கும் அமெரிக்கா!

Su.tha Arivalagan
Oct 25, 2023,10:20 AM IST

வாஷிங்டன்: அமெரிக்கர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அது மிகப் பெரிய தவறாகி விடும். பெரும் சிக்கலில் போய் முடியும் என்பதை ஈரான் மறந்து விடக் கூடாது என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் எச்சரித்துள்ளார்.


இஸ்ரேல் -ஹமாஸ் போரில் ஈரானின் பெயரும் அடிபடுகிறது. ஹமாஸ் இயக்கத்திற்கு ஈரான்தான் முழு ஆதரவு கொடுக்கிறது. அதை வளர்த்து விட்டதும் கூட ஈரான். அந்த நாட்டின் ஆதரவுடன்தான் ஹமாஸ் முழு பலத்துடன் இஸ்ரேலுக்கு எதிராக கடுமையான போரில் ஈடுபட்டுள்ளது.




போர் தொடங்கி 2 வாரங்களுக்கு மேலாகியும் நீடிப்பதால் இஸ்ரேலும் சரி, அமெரிக்காவும் சரி குழப்பமடைந்துள்ளன. இந்த அளவுக்கு ஹமாஸ் தாக்குப் பிடித்து இருக்க என்ன காரணம் என்பது குறித்தும் அவை யோசித்து வருகின்றன.


இந்த நிலையில் ஈரானுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், அமெரிக்கர்கள் மீது தாக்குதல் நடத்த ஈரானோ அல்லது அதன் ஆதரவு அமைப்புகளோ துணிந்தால் அது மிகப் பெரிய தவறாக போய் விடும். மிகப் பெரும் சிக்கலை ஏற்படுத்தும்.  மிகக் கடுமையான நடவடிக்கையை ஈரான் சந்திக்க வேண்டி வரும். இஸ்ரேல் போரிலிருந்து ஈரான் விலகியிருக்க வேண்டும்.


ஈரானுடன் அமெரிக்கா மோதல் போக்கை விரும்பவில்லை.  இந்தப் போர் பெரிதாவதை நாங்கள் விரும்பவில்லை. இதை முடிக்கவே விரும்புகிறோம். ஆனால் ஈரானோ அல்லது அவர்களது ஆதரவாளர்களோ அமெரிக்கர்கள் மீது தாக்குதல் நடத்த முடிவு செய்தால், தாக்கினால் கடும் எதிர் விளைவுகளை அவர்கள் சந்தித்தே ஆக வேண்டும். அது மிகக் கடுமையாக இருக்கும், இறுதியாக இருக்கும்.


ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இருக்கும் நாடுகள் குறிப்பாக ரஷ்யா , சீனா போன்ற நாடுகள் ஈரானுக்கு அறிவுரை சொல்ல வேண்டும். இது அவர்களது கடமையாகும் என்றார் பிளிங்கன். இஸ்ரேல் ஹமாஸ் போரில் தற்போது ஹிஸ்புல்லாவும் அடிக்கடி குறுக்கிடுகிறது. இந்த அமைப்பும், ஈரான் ஆதரவு பெற்ற அமைப்புதான். இப்படி ஈரான் ஆதரவு பெற்ற அமைப்புகள் நடத்தும் தாக்குதல்களால் அமெரிக்கா எரிச்சலடைந்துள்ளது. இஸ்ரேலுக்காக எதையும் செய்யத் துணியும் அமெரிக்கா, ஈரானை எச்சரித்திருப்பது முக்கியமாக பார்க்கப்படுகிறது.