பாகிஸ்தானியர்கள் அமெரிக்காவுக்கு வரத் தடை விதிக்கப் போகிறாரா டொனால்ட் டிரம்ப்?
வாஷிங்டன்: பாகிஸ்தான் உள்பட 4 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு வரத் தடை விதிப்பது தொடர்பாக அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டு வருவதாக அமெரிக்காவிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிட்டத்தட்ட 41 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்குத் தடை விதிப்பது குறித்து டிரம்ப் நிர்வாகம் பரிசீலனை செய்து வருவதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நாடுகளை 3 பிரிவுகளாக பிரித்துள்ளதாம் அமெரிக்கா. முதல் குழுவில் 10 நாடுகள் இடம் பெற்றுள்ளன. அதாவது ஆப்கானிஸ்தான், ஈரான், சிரியா, கியூபா, வட கொரியா ஆகியவை இதில் முக்கியமான நாடுகள். இந்த நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா தருவது முழுமையாக நிறுத்தப்படவுள்ளதாம்.
2வது பிரிவில் ஹைதி, லாவோஸ், மியான்மர், எரித்ரியா, தெற்கு சூடான் உள்ளிட்ட நாடுகள் இடம் பெற்றுள்ளன. இந்த நாடுகளைச் சேர்ந்த மாணவர் விசா, டூரிஸ்ட் விசா, குடியேற்ற விசா உள்ளிட்டவற்றுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வழங்க அமெரிக்கா முடிவெடுத்துள்ளதாம்.
3வது குழுவில் பாகிஸ்தான் வருகிறதாம். பூட்டான் உள்ளிட்ட நாடுகளும் இதில் இடம் பெற்றுள்ளன. இந்த நாடுகளுக்கும் கட்டுப்பாடுகளுடன் கூடிய விசா வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம். இது தற்காலிகமாக முடிவு செய்யப்பட்டுள்ளதாம். தேவைப்பட்டால் இதில் மாற்றமும் வருமாம்.
இந்த விசா கட்டுப்பாட்டுப் பட்டியலில் உள்ள பல நாடுகள் இஸ்லாமிய நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 7 முக்கியமான முஸ்லீம் நாடுகள் இதில் இடம் பெற்றுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிரம்ப் ஆட்சிக்கு வந்தது முதலே பல்வேறு அதிரியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இது சலசலப்பையும், சர்ச்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. சட்டவிரோதமாக குடியேறியவர்களை ராணுவ விமானத்தில் கை கால்களில் விலங்கிட்டு அனுப்பி வருகிறது டிரம்ப் நிர்வாகம். அதேபோல வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் குழந்தை பெற்றுக் கொண்டால் தானாகவே குடியுரிமை கிடைக்கும் நடைமுறையையும் டிரம்ப் ரத்து செய்து விட்டார்.
தற்போது பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.