உறைய வைத்த அமெரிக்க துப்பாக்கிச் சூடு.. மாஜி ராணுவ அதிகாரியின் வெறி.. யார் இந்த ரிச்சர்ட் கார்ட்?

Su.tha Arivalagan
Oct 26, 2023,05:33 PM IST
லெவிஸ்டன், மெய்ன்: அமெரிக்காவின் மெய்ன் மாகாணத்தில் உள்ள லெவிஸ்டன் நகரில் நடந்த அதிர வைக்கும் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய ராபர்ட் கார்ட் குறித்த அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

40 வயதான ராபர்ட் கார்ட் என்பவர்தான் லெவிஸ்டன் துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணம் என்று காவல்துறை அறிவித்துள்ளது. அவர் தானியங்கித் துப்பாக்கியுடன் காணப்படும் காட்சி அடங்கிய புகைப்படத்தையும் அது வெளியிட்டுள்ளது. இவர் தொடர்ந்து பிடிபடாமல் இருப்பதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.

ராபர்ட்டைப் பிடிக்க மிகப் பெரிய அளவிலான தேடுதல் வேட்டையை எப்பிஐ மற்றும் காவல்துறை மேற்கொண்டுள்ளன.



யார் இந்த ராபர்ட் கார்ட்?

போலீஸார் தேடி வரும் ராபர்ட் கார்ட், ராணுவத்தில் பணியாற்றிய அதிகாரி ஆவார். ஓய்வு பெற்று விட்ட அவருக்கு சமீப காலமாக மன நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தன்னிடம் யாரோ பேசுவதாக அடிக்கடி கூறுவாராம். காதில் வந்து ஏதோ சொல்வதாக அவர் கூறி வந்துள்ளார். மேலும் சாகோவில் உள்ள ராணுவப் பயிற்சி முகாமைத் தாக்கப் போவதாகவும் அடிக்கடி கூறி வந்துள்ளார்.

இதையடுத்து அவரை மன நல மருத்துவமனையில் அனுமதித்து 2 வார காலம் சிகிச்சையும் அளித்துள்ளனர். அங்கிருந்து வெளியே வந்த நிலையில்தான் இந்த துப்பாக்கிச் சூட்டில் இறங்கியுள்ளார் ராபர்ட் கார்ட். துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பிறகு வெள்ளை நிற சுபரு காரில் ஏறி அவர் தப்பிப் போயுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களும் கிடைத்துள்ளன. 

மெய்ன் மாகாணத்தில் உள்ள   நகரம்தான் லெவிஸ்டன். இங்குதான் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. 22 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமான பேர் காயமடைந்துள்ளனர்.  ஒரு பவுலிங் மையத்தில்தான் முதலில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. அடுத்து ஒரு ஹோட்டல் பாருக்குள் புகுந்து சுட்டுள்ளார்.