ஆம்புலன்ஸ் கதவை உடைத்து.. வெளியே குதித்து.. தப்பி ஓடிய அமெரிக்கர்!

Su.tha Arivalagan
Jan 27, 2023,09:20 AM IST

சென்னை:  சென்னையில் காயமடைந்த அமெரிக்கர் ஒருவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்காக முயன்றபோது அவர் ஆம்புலன்ஸ் கண்ணாடிக் கதவை உடைத்து வெளியே குதித்து தப்பி ஓடி விட்டார்.


அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்தவர் 26 வயதான கியானி மார்செலோ. இவர் தனது நண்பர் ஒருவரின் திருமணத்திற்காக சென்னை வந்திருந்தார். பெரியமேட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தார். புதன்கிழமை மாலை 3 மணியளவில் தனது அறைக்குத் திரும்பினார் மார்சலோ. நல்ல குடிபோதையில் அவர் இருந்ததால், அவரை ஹோட்டல் ஊழியர்கள் கைத்தாங்கலாக அறைக்குக் கொண்டு போய் விட்டனர்.


இந்த நிலையில் அன்று நள்ளிரவுக்கு மேல் தலையில் பலத்த காயத்துடன் தனது அறையிலிருந்து ஹோட்டல் லாபிக்கு வந்துள்ளார். இதைப் பார்த்த ஹோட்டல் ஊழியர்கள், ஆம்புலன்ஸுக்குத் தகவல் கொடுத்தனர். அவர் ஹோட்டல் அறைக்குள் தவறி விழுந்து தலையில் காயம் ஏற்பட்டது தெரிய வந்தது. ஆம்புலன்ஸ் வந்ததும் அவரை அதில் ஏற்றி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.


ஆம்புலன்ஸ் ரிப்பன் பில்டிங்கைத் தாண்டியிருக்கும். திடீரென மார்செலோ ஆம்புலன்ஸ் கண்ணாடிக் கதவை உடைத்து, ஓடும் வண்டியிலிருந்து வெளியே குதித்தார். பின்னர் அங்கிருந்து ஓடி விட்டார். இதையடுத்து ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீஸார் விரைந்து வந்தனர். அப்போது அல்லிக்குளம் கோர்ட் வளாக பார்க்கிங் பகுதியில் மார்செலோ பதுங்கியிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை மீட்ட போலீஸார், அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். தற்போது பலத்த பாதுகாப்புடன் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.