இந்தியாவைப் போலவே.. அமெரிக்காவிலும் டிக் டாக்குக்கு ஆபத்து.. "ஆப்"பை தடை செய்ய சட்டம் வந்தது!

Meenakshi
Apr 24, 2024,06:14 PM IST

வாஷிங்டன்: அமெரிக்காவில் டிக்டாக் செயலியை தடை செய்வதற்கான சட்டத்தை அந்நாட்டின் நாடாளுமன்ற மேலவை நிறைவேற்றியுள்ளது. அமெரிக்கர்களின் தரவுகளை சீனா திருடுவதாக அரசு குற்றம் சாட்டியுள்ளது.


டிக்டாக் உலகம் முழுவதும் பிரபலமான வீடியோ. குறு வீடியோக்களை எடுத்து இதில் வெளியிடலாம். இந்தியாவிலும் ஒரு காலத்தில் இது சக்கை போடு போட்டது. ஜிபி முத்து, ரவுடி பேபி சூர்யா, திருச்சி சாதனா என பலரும் இதன் மூலம் வெளியுலகுக்குத் தெரிய வந்தனர். யாரைப் பார்த்தாலும் டிக்டாக் பைத்தியங்களாகவே சுற்றிக் கொண்டிருந்த காலம் அது. பின்னர் இதை மத்திய அரசு தடை விதித்து விட்டது.


பைட்டான்ஸ் என்ற சீன நிறுவனத்தை தாய் நிறுவனமாக கொண்டது டிக்டாக்.  டிக்டாக் அமெரிக்காவில் நிறைய பயனாளர்களைக் கொண்டுள்ளது. இந்த நிலையில், டிக் டாக் செயலி மூலமாக  தன்னுடைய பயனாளர்களின் பெரும்பாலான தகவல்களை சீனாவிடம் கொடுக்கிறது என பைட்டான்ஸ் மீது அமெரிக்காவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவன பயனாளர்களின் அனுமதி இன்றி ரகசியமாக தகவல்களை எடுக்கிறது என வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.




வழக்குப்பதிவு செய்த மிஸ்டி ஹாங் என்னும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவி தான் டிக்டாக் கை பதிவிறக்கம் செய்ததாகவும் ஆனால் அதில், எந்த கணக்கும் தொடங்கவில்லை என வழக்கில் குறிப்பிட்டிருந்தார்.இந்நிலையில, சில மாதங்களில் தன்னுடைய பெயரில்  நிறுவனமே கணக்கு  தொடங்கியிருந்ததாகவும் தான் பதிவிடாமல் வைத்திருந்த  வீடியோ காட்சியை எடுத்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். 


அமெரிக்கர்களின் தரவுகளை சீனா திருடுவதாக குடியரசு கட்சி தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகிறது. இதனால் டிக்டாக் செயலியை தடை செய்வதற்கான சட்டத்தை அந்நாட்டின் நாடாளுமன்ற மேலவை நிறைவேற்றியுள்ளது. டிக்டாக் செயலியின் தாய் நிறுவனமாக சீனாவின் பைடான்ஸ் நிறுவனம் 9 மாதங்களுக்குள் டிக்டாக்கின் அமெரிக்க பங்குகளை விற்க வேண்டும். இல்லாவிட்டால், அதை தடை செய்ய இச்சட்டம் வழிவகை செய்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.