"ஹவுத்தி"யைக் குறி வைத்து அமெரிக்கா, இங்கிலாந்து தாக்குதல்.. இந்தியாவுக்குப் போன் போட்ட பிளிங்கன்!

Su.tha Arivalagan
Jan 12, 2024,09:03 AM IST

வாஷிங்டன்: ஏமன் நாட்டில் உள்ள ஹவுத்தி அமைப்பின் இடங்களைக் குறி வைத்து அமெரிக்காவும், இங்கிலாந்தும் இணைந்து அதிரடித் தாக்குதலை நடத்தியுள்ளன. இந்த தாக்குதல் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கன் விளக்கியுள்ளார்.


ஈரான் ஆதரவு அமைப்புதான் இந்த ஹவுத்தி. நீண்ட காலமாகவே அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் நேச நாடுகளுக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக செங்கடல் பகுதியில் இதன் அட்டகாசம் அதிகம். மேலும் காஸா போருக்குப் பின்னர் செங்கடல் பகுதியில் வரும் மேற்கத்திய நாடுகளின் கப்பல்களைத் தாக்கி வந்தது ஹவுத்தி.


யார் பேச்சையும் கேட்காத ஹவுத்தி




அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளின் கப்பல்கள் மட்டுமல்லாமல், சர்வதேச நாடுகளின் கப்பல் போக்குவரத்தை சீர்குலைக்கும் விதமாக இது தொடர்ந்து தாக்கி வருகிறது. இதையடுத்து இந்த அமைப்பை ஈரான் கட்டுப்படுத்த வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து எச்சரித்து வருகிறது. ஆனாலும் ஹவுத்தி கேட்பதாக இல்லை.


ஏமனில் இருந்தபடி தனது தாக்குதல்களை விரிவாக்கிக் கொண்டு வருகிறது ஹவுத்தி. இந்த நிலையில் ஹவுத்தியின் ஏமன் தளங்களைக் குறி வைத்து அமெரிக்காவும், இங்கிலாந்தும் அதிரடித் தாக்குதலை நடத்தியுள்ளன. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஏமன் நாடு முழுவதும் பல்வேறு இடங்களிலும் அமெரிக்காவும், இங்கிலாந்தும்  தாக்குதலை நடத்தியுள்ளதாக ராய்ட்டர்ஸ் தகவல் தெரிவிக்கிறது. நாடு முழுவதும் பல இடங்கள் பற்றி எரிவதாகவும் ஒரு தகவல் தெரிவிக்கிறது. தேவைப்பட்டால் மேலும் தாக்குதல் நடத்தத் தயங்க மாட்டோம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பிடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இதுகுறித்து பிடன் கூறுகையில், கப்பல் போக்குவரத்தை சீர்குலைக்க யாருக்கும் உரிமை கிடையாது. அப்படிச் செய்வோர் மீது நாங்கள் தாக்குதல் நடத்துவோம் என்ற தெளிவான செய்தியாக இது இருக்கும் என்று கூறியுள்ளார் பிடன்.


ஏமன் தலைநகர் சானா, சாடா, தமர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹவுத்தி அமைப்பும் தெரிவித்துள்ளது. அமெரிக்காவும், ஆக்கிரமிப்பு நாடும் (இஸ்ரேல்), இங்கிலாந்தும் இணைந்து இந்த கோரத் தாக்குதலை நடத்தியுள்ளன என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.


பலமுனைத் தாக்குதல்


விமானம் மூலமாகவும், கப்பல் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் மூலமாகவும் அமெரிக்க கூட்டுப் படையின் தாக்குதல் நடந்துள்ளது. 12க்கும் மேற்பட்ட இடங்கள் குறி வைக்கப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  ஹவுத்தி அமைப்பின் ராணுவ பலத்தை நிர்மூலமாக்கும் நோக்கில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஏமன் நாட்டின் பெரும் பகுதி இந்த ஹவுத்தி அமைப்பின் வசம்தான் உள்ளது. ஐ.நா. உள்பட எந்த சர்வதேச அமைப்பின் கோரிக்கையையும் இவர்கள் கேட்பதில்லை. டிரோன்கள் மூலம் தொடர்ந்து செங்கடல் பகுதியில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.  அமெரிக்கா பலமுறை எச்சரித்தும் கூட இவர்கள் கேட்கவில்லை.  ஹமாஸுக்கு ஆதரவாக தாங்கள் செயல்படுவதாக ஹவுத்தி கூறியுள்ளது.  இதுவரை செங்கடல் பகுதியில் 27 கப்பல்களை ஹவுத்தி தாக்கியுள்ளது. இதனால் செங்கடல் பகுதியில் கப்பல் போக்குவரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலகின் கப்பல் போக்குவரத்தில் 15 சதவீதம், செங்கடல் பகுதி வழியாகத்தான் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


ஜெய்சங்கருடன் பிளிங்கன் ஆலோசனை


இதற்கிடையே, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோணி பிளிங்கன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஹவுத்தி தாக்குதல் குறித்து விவரித்தார். தாக்குதலுக்கான சூழல் குறித்தும் அவர் விளக்கினார். இரு தலைவர்களும் ஹவுத்தி விவகாரம் குறித்து தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.