அஞ்சு ரூபாய் குர்குரே.. அப்படின்னு சாதாரணமா இருக்காதீங்க புருஷர்களே.. இதைப் படிங்க!

Su.tha Arivalagan
May 14, 2024,06:42 PM IST

ஆக்ரா: உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் தனது கணவர் குர்குரே வாங்கித் தரவில்லை என்ற காரணத்திற்காக அவரை விவாகரத்து செய்யும் முடிவை மனைவி எடுத்த செயல் அந்த மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


எப்பப் பார்த்தாலும் அம்மா மீதே பாசமாக இருக்கிறார்.. தென் மாநிலங்களுக்கு டூர் கூட்டிட்டுப் போகச் சொன்னா அயோத்திக்கு டூர் கூட்டிட்டுப் போயிட்டார் என்பது உள்ளிட்ட காரணங்களுக்காக தங்களது கணவர்கள் மீது விவாகரத்து கோரி வழக்குப் போட்ட வட மாநிலப் பெண்களை சமீபத்தில் பார்த்தோம்.. ஆனால் இப்போது வந்துள்ள செய்தி சற்றே அதிர வைக்கிறது.


வெறும் 5 ரூபாய் குர்குரே வாங்கித் தரவில்லை என்ற காரணத்திற்காக தனது கணவரை விவாகரத்து செய்யத் துணிந்து விட்டார் ஆக்ராவைச் சேர்ந்த ஒரு பெண்.  அவரது பெயர் விவரம் வெளியிடப்படவில்லை. அந்தப் பெண்ணுக்கு குர்குரே என்றால் ரொம்பப் பிடிக்குமாம். தனது கணவரிடம் தினசரி குர்குரே கேட்டு அடம் பிடிப்பாராம். அவரும் வாங்கிக் கொண்டு வந்து தருவாராம். இப்படியா பைத்தியம் போல நடந்து கொள்வே என்று கேட்டு அடிக்கடி மனைவியை திட்டவும் செய்வாராம்.




இந்த நிலையில் சமீபத்தில் குர்குரே வாங்கி வர மறந்து விட்டார் கணவர். அவ்வளவுதான். கோபத்தின் உச்சத்துக்கே போய் விட்டாராம் மனைவி. கணவருடன் சண்டைக்குப் போய் விட்டார். அத்தோடு விடவில்லை. கோபித்துக் கொண்டு தனது அம்மா வீட்டுக்குக் கிளம்பிப் போய் விட்டாராம். அங்கு போயும் அவருக்கு ஆத்திரம் தீரவில்லை போலும். அங்குள்ள காவல் நிலையத்திற்குப் போய் தனது கணவரிடமிருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என்று கோரி மனு கொடுத்துள்ளார்.


என்னங்கடா இது நமக்கு வந்த சோதனை என்று குழப்பமான ஷாகஞ்ச் நகர் காவல் நிலையத்தினர் அந்தப் பெண்ணையும், அவரது கணவரையும் பேமிலி கவுன்சிலிங்குக்குப் போகுமாறு கூறி அனுப்பி வைத்தனர்.  இந்த சண்டை அந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதற்கிடையே, உண்மையிலேயே குர்குரேவுக்காகத்தான் ரெண்டும் சண்டை போட்டுக்கிட்டாங்களா இல்லை.. வேறு ஏதாவது காரணம் இருக்கா அப்படின்னு போலீஸிார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த வருடம்தான் இந்த ஜோடிக்கு கல்யாணம் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.!


அஞ்சு ரூபாயோ.. பத்து ரூபாயோ.. பொண்டாட்டி ஏதாச்சும் கேட்டுட்டா சங்கட்டப்படாம வாங்கிக் கொடுத்திருங்க புருஷர்களே.. இல்லாட்டி  கஷ்டம்ண்ணே.. ரொம்பக் கஷ்டம்!