பொய் சொல்லி திருமணம் செய்து பெண்ணை ஏமாற்றினால் 10 ஆண்டு சிறை.. புது சட்டம்

Aadmika
Aug 12, 2023,02:31 PM IST
டில்லி : தன்னுடைய உண்மையான அடையாளங்களை மறைத்தோ, பொய் சொல்லியோ ஒரு பெண்ணை திருமணம் செய்தோ அல்லத உடலுறவு கொண்டே ஏமாற்றினால் 10 ஆண்டு சிறை தண்டனை என்ற புதிய சட்டத்தை மத்திய அரசு முதல் முறையாக அறிமுகம் செய்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்திய குற்றவியல் சட்டத்திற்கு (ஐபிசி) மாற்றாக பாரதிய நியாய சன்கிதா என்ற புதிய சட்ட மசோதாவை நேற்று லோக்சபாவில் அறிமுகம் செய்தார். அப்போது பேசிய அவர், பெண்களுக்கு எதிரான குற்றங்களின் மீது தனி கவனம் செலுத்தும் வகையில் இந்த புதிய சட்டம் கொண்டு வரப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.



புதிய சட்ட மசோதாவை தாக்கல் செய்து பேசிய அமித்ஷா, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் அவர்கள் சந்திக்கும் பல சமூகம் சார்ந்த பிரச்சனைகளுக்கு முடிவு கட்டும் வகையில் இந்த சட்ட மசோதா கொண்டு வரப்படுகிறது. திருமணத்திற்காகவோ, வேலைக்காகவோ, பதவி உயர்விற்காகவோ பொய்யான வாக்குறுதியை கொடுத்தும், தனது உண்மையான அடையாளத்தை மறைத்தும் திருமணம் செய்தோ அல்லது உடலுறவு வைத்தோ ஏமாற்றினால் அதை குற்றமாக கருதும் சட்டம் முதல் முறையாக கொண்டு வரப்பட உள்ளது என்றார்.

பொய்யான வாக்குறுதி அளித்து பெண்களை ஏமாற்றினால் அவர்களை தண்டிக்க சட்டத்தில் இடமில்லை என பல வழக்குகளில் சொல்லப்படுகிறது. இவற்றை குறிப்பிட்டும் அமித்ஷா பேசினார். ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண்டு பிறகு அவற்றை ஏமாற்றினால் அது பாலியல் பலாத்காரம் ஆகாது என பல வழக்குகளில் சொல்லப்படுகிறது. இதனால் பெண்களுக்கு எதிராக பொய்யான வாக்குறுதிகளால் ஏமாற்றப்படும் குற்றங்கள் அதிகரிப்பதால் அவர்களுக்கு 10 ஆண்டு வரை சிறை தண்டனையும் அபராதமும் அளிக்க இந்த சட்டம் வழி செய்யும் என அமித்ஷா தெரிவித்துள்ளார். 

உடலுறவிற்காக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக பொய்யான வாக்குறுதி அளித்து, அவர்களின் சம்மதத்துடன் உடலுறவு கொண்ட பிறகு அந்த வாக்குறுதிபடி திருமணம் செய்யாமல் பல ஆண்கள் ஏமாற்றி வருகிறார்கள். இது போன்ற குற்றங்கள் நாட்டின் அதிகரித்து வருவதாக சீனியர் வழக்கறிஞரான ஷில்பி ஜெயினும் தெரிவித்தார்.