மாசு எல்லாம் ஆகவில்லை.. நீராட மட்டுமல்ல.. குடிக்கவும் ஏற்றது கங்கை நீர்.. உ.பி. முதல்வர் ஆதித்யாநாத்
Feb 19, 2025,05:07 PM IST
லக்னோ: மகா கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் அசுத்த நீர் கலப்பதில்லை. மாநில மாசுக்கட்டுப்பாடு வாரியம் அந்நீரை தொடர்ந்து கண்காணிதது வருகிறது. நீராடி வழிபட மட்டுமல்ல, குடிப்பதற்கும் ஏற்றது கங்கை நீர் என்று உபி சட்டமன்றத்தில் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
மகாகும்பமேளா என்பது இந்தியாவில் அனைத்து மொழி மக்களையும் ஒன்றிணைக்கும் மிகப் பிரம்மாண்ட விழா. அதிலும் இந்தியாவின் பிரயாக்ராஜ் பகுதியில் அதிக மக்கள் கூடும் மிகப்பிரமாண்ட விழாவாக யுனஸ்கோ அங்கீகாரம் கொடுத்துள்ளது. இந்த பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் புனிதர்கள், பண்டிதர்கள், ஞானிகள், போகிகள், மக்கள், தலைவர்கள் என கோடிக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் அரிய நிகழ்வாகும்.
இதில் நீராடினால் பக்தர்கள் சிவலோகப் பதவியை அடைவார்கள் என இந்துக்கள் கருதுகின்றனர். இந்த மகா கும்பமேளா 2025 ஆம் கடந்த மாதம் ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 26 ஆம் தேதி நிறைவடைகிறது. இரண்டு, மூன்று தலைமுறைகளுக்குப் பிறகு காணும் அரிய நிகழ்வாக 144 வருடங்களுக்கு ஒருமுறை வரும் இந்த மகா கும்பமேளாவில் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள ஏராளமான நாட்டு மக்கள், தலைவர்கள் கலந்து கொண்டு வருகின்றனர்.
உலகின் மிக பெரிய ஆன்மீக ஒன்றுகூடலான இந்த மகா கும்பமேளா முடிவுக்கு வர இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பக்தர்களின் வருகையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில், பிரயாக்ராஜில் கங்கை மற்றும் யமுனை ஆறுகள் சங்கமிக்கும் பகுதி உட்பட பல்வேறு இடங்களில் ஆற்றின் நீரில் Faecal Coliform என்ற பாக்டீரியா அதிகளவில் இருப்பதாக நேற்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை வெளியிட்டிருந்தது. Faecal Coliform என்பது மனிதர்கள், விலங்குகளின் மலக் குடல் பாதையில் உருவாகும் பாக்டீரியாக்கள் ஆகும். இவை பிரயாக்ராஜி நதியில் அதிகளவில் இருப்பதாக அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.