ஐக்கிய அரபு அமீரகத்தில் வெளுத்து வாங்கிய கனமழை.. மிதக்கும் துபாய்.. இதுவரை 18 பேர் பலி

Meenakshi
Apr 17, 2024,10:59 AM IST

துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்சில் கொட்டி தீர்த்த கனமழையால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. துபாய் உள்ளிட்ட பல நகரங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ரோடுகளில் ஓடுகிறது. இந்த மழை நீடிக்கும் என அந்நாட்டு வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மழையால் இதுவரை 18 பேர் பலியாகியுள்ளனர்


கடந்த இரு நாட்களாக ஐக்கிய அரபு நாடுகளில் வரலாறு காணாத கன மழை பெய்து வருகிறது. துபாய், ஷார்ஜா, அபுதாபி உள்ளிட்ட நகரங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. மழை காரணமாக  அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இடைவிடாது பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 




சாலைகளில் வெள்ள நீர் ஆறாக ஓடுவதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிக அளவிலான வாகனங்கள் நீரில்  மூழ்கியுள்ளன. தேசிய சாலைகள், சுரங்க சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் அந்த சாலைகள் வாகனங்கள் செல்ல முடியாமல் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலகின் முக்கிய விமான நிலையமான துபாய் விமான நிலையம் முழுவதும் மழை  நீர் தேங்கியதால் பெரும்பாலான விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.




இந்த மழைக்கு இதுவரை 18 பேர் பலியாகியுள்ளனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கி 8 பேரும், பள்ளி வாகனம் அடித்து செல்லப்பட்டதில் 10 பேரும் பலியாகியுள்ளனர். மழை காரணமாக அங்குள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மழை காரணமாக அங்குள்ள பொதுமக்கள் செய்வது அறியாமல் திகைத்துள்ளனர். இந்த அளவிற்கான கன மழையை அங்குள்ள மக்கள் பார்த்தது இல்லை என்று கூறி வருகின்றனர்.இந்த மழை மேலும் தொடரும் என அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.