முருகனுக்கே மலை சொந்தம்.. திருப்பரங்குன்றத்தில்.. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆவேசம்!

Meenakshi
Feb 17, 2025,06:30 PM IST

மதுரை: திருப்பரங்குன்றத்திற்கு வருகை தந்த மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல். முருகனை காவல்துறையினர் தடுத்தபோது அவர்களுடன் ஆவேசமாக வாதிட்டார் அமைச்சர் முருகன். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, திருப்பரங்குன்றம் மலை முருகனுக்கே சொந்தம் என்றும் அவர் கூறினார்.


பாஜக தொண்டர்கள் புடை சூழ மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று திருப்பரங்குன்றம் சென்றார். மலை மீது உள்ள காசிவிஸ்வநாதர் கோவிலுக்கு பாஜக தொண்டர்களுடன் செல்ல முற்பட்டா். அப்போது அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், போலீசாருக்கும் மத்திய இணை அமைச்சருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 




அப்போது பேசிய மத்திய இணையமைச்சர், இதை நான் சும்மா விட மாட்டேன். கோவிலுக்கு போறதுக்கு ஏதும் தடை இருக்கா. இது முறையானது அல்ல. மத்திய அமைச்சரை  தடுத்து நிறுத்த உங்களுக்கு அதிகாரம் இல்லை என்று கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். போலீசார் கூட்டமாக செல்ல அனுமதி இல்லை என்று கூறியதால், நான் மட்டும் தனியாக செல்கிறேன் என்று கூறி சென்றார் மத்திய இணையமைச்சர் எல்.முருகன். இதனால், அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


இதனையடுத்து, திருப்பரங்குன்றம் மலை மீது ஏறிச் செல்ல மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உட்பட 4 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் அவர்கள் மலை மீது ஏறிச் சென்று சாமி தரிசனம் செய்தார். அதன்பின்னர் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்  நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், ஐ.நா.சபையில் தமிழ் மொழியை பிரதமர் போற்றியுள்ளார். தமிழ் மிக தொன்மையான மொழி என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ் மொழிக்கு மரியாதை அளிக்கும் வகையில் 3 ஆண்டுகளாக காசி தமிழ் சங்கமம் நடந்து கொண்டு இருக்கிறது. 


தமிழ் மொழிக்கு பாஜக அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியை காங்கிரசும், திமுகவும் நடத்த விடாமல் தடுத்து வருகிறது. பிரதமர் மோடி தலையிட்டு ஜல்லிக்கட்டு போட்டியை மீண்டும் கொண்டு வந்தார். 


திருப்பரங்குன்றம் மலை முருகப்பெருமானுக்கே சொந்தமானது என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கந்தர் மலையை சிக்கந்தர் மலையாக தமிழக அரசு மாற்றி உள்ளது. மலை மீது தீபம் ஏற்ற அறநிலையத்துறை விரைவில் முன்வர வேண்டும். திருப்பரங்குன்றம் சைவத் திருத்தலம். அங்கு பலியிடும் வழக்கம் கிடையாது என்று அவர் தெரிவித்துள்ளார்.