"நீலகிரியில் போட்டியில்லை" .. மீண்டும் ராஜ்யசபா எம்.பியாகிறார் மத்திய இணை அமைச்சர் எல். முருகன்!

Su.tha Arivalagan
Feb 14, 2024,06:06 PM IST

டெல்லி: மத்திய இணை அமைச்சர் எல். முருகன், வருகிற லோக்சபா தேர்தலில் நீலகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரை மீண்டும் ராஜ்யசபா எம்.பியாக்க பாஜக முடிவு செய்துள்ளது.


மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை இணை அமைச்சராக இருக்கிறார் எல். முருகன். கடந்த தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலின்போது அவர் மாநில பாஜக தலைவராக பதவி வகித்து வந்தார். அப்போது தாராபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். இதைத் தொடர்ந்து அவர் மத்தியப் பிரதேச மாநிலத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். மத்திய அமைச்சரும் ஆனார்.




அவரது பதவிக்காலம் வருகிற ஏப்ரல் மாதத்துடன் நிறைவடையவுள்ளது. இதையடுத்து மீண்டும் அவரை ராஜ்யசபா வேட்பாளராக பாஜக மேலிடம் அறிவித்தது. மத்தியப் பிரதேசத்திலேயே அவர் மீண்டும் போட்டியிடுவார் என்று கட்சி மேலிடம் அறிவித்துள்ளது.


முன்னதாக வருகிற லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டின் நீலகிரி தொகுதியில் அவர் முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவை எதிர்த்துப் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. பாஜகவினரும் அங்கு தீவிரமாக களப் பணியாற்றி வந்தனர். ஆனால் திடீர் திருப்பமாக மீண்டும் ராஜ்யசபா எம்.பியாகவுள்ளார் எல். முருகன்.


அதேபோல, மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஒடிசா மாநிலத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  அங்கு பிஜூ ஜனதாதளம் கட்சியின் ஆதரவுடன் அவர் தேர்தலில் போட்டியிடுவார்.