பெருசா அரசியல் புரட்சி நடக்கப் போகுது.. ஜூன் 4ம் தேதி தெரியும்.. புதிர் போட்ட எல். முருகன்!

Manjula Devi
May 25, 2024,04:34 PM IST

சென்னை: நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளரும் மத்திய இணை அமைச்சருமான எல் முருகன்,இதுவரை யாரும் எதிர்பாராத அரசியல் புரட்சி இந்த தேர்தலில் நடக்க போகிறது. ஜூன் நான்காம் தேதி உங்களுக்கே தெரியும். பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராவது உறுதி என்று கூறியுள்ளார்.


பாஜக, மத்திய இணை அமைச்சர் எல் முருகன் திருச்சி வந்திருந்தார். அங்குள்ள ஸ்ரீரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது முருகன் கூறியதாவது:


400க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக தான் வெற்றி பெறும். பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராவது உறுதி. ஏற்கனவே ஐந்து கட்ட தேர்தல்கள் நிறைவடைந்து உள்ள நிலையில் நிச்சயம் பாஜக 310 இடங்களையும் கைப்பற்றி முன்னணியில் வரும். காங்கிரஸ் 40 தொகுதிகள் கூட வெற்றி பெறாது. 




திமுக கூட்டணி கண்டிப்பாக தோல்வியை சந்திக்கும். பிரதமர் பேசியதை சரியாக புரிந்து கொள்ளாமல் மக்களிடம் பொய்யாக திரித்து பேசி வருகிறார் தமிழக முதல்வர். தமிழ்நாட்டில் மிகப்பெரிய திருப்பம் வரப்போகிறது. இந்த தேர்தலில் 400 தொகுதிக்கு மேல் பாஜகவின் வெற்றி வரலாற்று சாதனையாக அமையும். இதுவரை யாரும் எதிர்பாராத அரசியல் புரட்சி இந்த தேர்தலில் நடைபெற உள்ளது.


ஜூன் நான்காம் தேதி உங்களுக்கே தெரியும். தமிழ்நாட்டில் பாஜகவின் மிகப்பெரிய வெற்றியை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நாங்கள் சமர்ப்பிப்போம் என பேசி உள்ளார்.