அண்ணாமலையுடன் இலங்கை சென்றார் எல் முருகன்.. யாழ்ப்பாணத்தில் சிறப்பான வரவேற்பு!
யாழ்ப்பாணம்: மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல். முருகன் இலங்கை சென்றுள்ளார். அவருடன் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் சென்றார். எல். முருகனுக்கு பாரம்பரிய முறையில் யாழ்ப்பாணத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தியா - இலங்கை கூட்டுறவின் மூலம் யாழ்ப்பாணத்தில் உருவான காலச்சார மைய துவக்க விழாவில் கலந்து கொள்வதற்காக மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல் முருகன் இலங்கை சென்றுள்ளார்.
யாழ்ப்பாணம் விமான நிலையம் சென்றடைந்த மத்திய அமைச்சருக்கு பாரம்பரிய முறைப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஆளுநர் கௌரவ ஜீவன் தியாகராஜாவை அமைச்சர் சந்தித்தார்.
அப்போது அபிவிருத்தி ஒத்துழைப்பில் யாழ்ப்பாணத்திற்கு இந்தியா வழங்கும் முக்கியத்துவம் குறித்து இச்சந்திப்பில் சுட்டிக்காட்டியிருந்த மத்திய அமைச்சர், பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவுக்கு முதலிடம் என்றக் கொள்கையின்கீழ் இந்தியா தொடர்ந்து வழி நடத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.
பின்னர் யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் உள்ள அப்துல்கலாம் சிலைக்கு அமைச்சர் முருகன் மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் இந்திய நிதியுதவியின் கீழ் 250 இலங்கை மக்களுக்கு உணவு தானியங்களையும் அவர் வழங்கினார். தொடர்ந்து இலங்கை காங்கேசன்துறை துறைமுகத்தையும் அமைச்சர் முருகன் பார்வையிட்டார்.
இலங்கை 13வது சட்டத் திருத்தம்
எல்.முருகனுடன், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் இலங்கை சென்றுள்ளார். முன்னதாக அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கையில் அரசியல் சாசனத்தின் 13வது சட்டத் திருத்தம் தொடர்பாக நானும் அமைச்சர் முருகனும் இலங்கை செல்கிறோம். இந்த சட்டத் திருத்தத்தை அமல்படுத்துவதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்தியஅரசு மிகுந்த அக்கறையும்,ஆர்வமும் காட்டி வருகிறது.
இலங்கைப் பிரச்சினையை மிகவும் சிறப்பாக கையாண்டு வருகிறது மத்தியஅரசு. மோடி அரசு பதவியேற்ற பிறகு தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாகிச் சூடு நடத்துவது அடியோடு குறைந்து விட்டது.
யாழ்ப்பாணத்தில், இலங்கையின் சுதந்திர தின விழா பிப்ரவரி 11ம் தேதி நடைபெறவுள்ளது. மேலும்ம் யாழ்ப்பாணத்தில் உருவாகியுள்ள காலச்சார மைய துவக்க விழாவில் அந்த நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவும் கலந்து கொள்கிறார். அதிலும் நாங்கள் கலந்து கொள்ளவுள்ளோம். தமிழர் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களுடனும் நாங்கள் பேசவுள்ளோம் என்று கூறியிருந்தார்.