மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில்.. இன்று மாலை கூடுகிறது.. அனைத்து கட்சி கூட்டம்!

Manjula Devi
Apr 24, 2025,10:16 AM IST

டெல்லி: பஹல்காம் தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள இன்று மாலை 6 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது ஒன்றிய அரசு.


ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் மாவட்டத்தில் உள்ள பைசரன்  பள்ளத்தாக்கு பகுதியில் தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் வெளிநாட்டவர் உட்பட 28 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தைச் சேர்ந்த மூவர் உட்பட 17 பேர் காயமடைந்தனர்.  இச்சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.மேலும் இந்த தாக்குதல் உலக அளவில் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியது. அதே சமயத்தில் இந்த தாக்குதலை கண்டித்து பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. இதனால் டெல்லி, மும்பை, சென்னை, உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பொதுமக்கள் கூடும் இடங்களான ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வழிபாட்டுத் தலங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலில் உயிரிழந்தவகளுக்கு ஜம்மு காஷ்மீர் அரசு 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளது.




மேலும் இந்த தீவிரவாத தாக்குதலை கேட்டறிந்த பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக சவுதி அரேபியா பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு டெல்லி திரும்பினார். பின்னர் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.  இதன்பிறகு நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில் அட்டாரி-வாகா எல்லை பகுதிகள் உடனடியாக மூடப்படுகிறது. பாகிஸ்தானுடான சிந்து நதி ஒப்பந்தம் ரத்து செய்யப்படும். பாகிஸ்தான் உடனான தூதரக உறவை மாற்றி அமைக்கப்படும். அதே சமயத்தில் தூதரகத்தில் உள்ள அதிகாரிகளின் எண்ணிக்கை 55 லிருந்து 36 ஆக குறைக்கப்படும்.

பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு வருவோருக்கு இனி விசாக்கள் வழங்கப்பட மாட்டாது. இப்போது விசா பெற்றுள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும் என பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இதனிடையே அம்மாநிலத்தில் பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்தி ஹெலிகாப்டர் உதவியுடன் பயங்கரவாத செயலில் ஈடுபட்டவர்களை ராணுவ வீரர்கள் தேடி வருகின்றனர்.


இந்த நிலையில் 

பஹல்காம் தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள இன்று மாலை 6:00 மணிக்கு அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது ஒன்றிய அரசு .பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் இந்த கூட்டம் நடக்கிறது.

 வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.