பெரு மழை புரட்டிப் போட்ட சென்னை.. ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார் அமைச்சர் ராஜ்நாத் சிங்

Su.tha Arivalagan
Dec 07, 2023,06:13 PM IST

சென்னை:  சென்னையில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜாநாத்சிங் இன்று ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார்.


சென்னையில் சமீபத்தில் மிச்சாங் புயல் காரணமாக மிகப் பெரும் மழை கொட்டி தீர்த்தது. சென்னை மட்டுமல்லாமல் சென்னைக்கு அருகாமையில் உள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் மிகப்பெரும் கனமழை பெய்தது. இதன் காரணமாக சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகள் நீரில் மிதக்கும் நிலை ஏற்பட்டது. சென்னை புறநகரிலும் வெள்ள நீர் அருவி போல் ஓடியதால் மக்கள் பெரும் அவஸ்தைக்குள்ளானார்கள்.


இந்த மழையும் புயலும் போன பின்னும்கூட இன்னும் சென்னை நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளம் முழுமையாக வடியவில்லை. தொடர்ந்து வெள்ள நீரை வடிய வைக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன. இந்த புயல் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிசெய்ய மத்திய அரசு 5060 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்க வேண்டும் என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார். மேலும் மத்திய அரசிலிருந்து ஒரு குழு சென்னைக்கு வருகை தந்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.




இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவின் பேரில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று சென்னை வந்தார். சென்னை வந்த அவர் ஹெலிகாப்டர் மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது அவருடன் தமிழ்நாடு அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா ஆகியோரும் உடன் இருந்தனர். இந்த ஆய்வுக்கு பின்னர் பிரதமர் மோடியிடம் மத்திய அமைச்சர் ராஜநாத் சிங் அறிக்கை கொடுப்பார் என்று தெரிகிறது. அதன் பேரில் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு நிதி உதவி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடி, இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி மழை வெள்ள பாதிப்பு குறித்துக் கேட்டறிந்தார்.