"வட இந்தியர்கள்".. தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைக்க பாஜக சதி.. ஸ்டாலின் குற்றச்சாட்டு

Su.tha Arivalagan
Mar 09, 2023,02:16 PM IST
சென்னை: வட மாநிலத் தொழிலாளர்களுக்கு தமிழ்நாட்டில் சிறு தொல்லை கூட கிடையாது. ஆனால் பாஜகவினர் திட்டமிட்டு உள்நோக்கத்துடன் போலியான வீடியோக்களைத் தயாரித்து தமிழ்நாட்டின் அமைதியை சீர் குலைக்கத் திட்டமிட்டனர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

சமீபத்தில் தமிழ்நாட்டில் வேலை பார்க்கும் வட இந்தியத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பொய்யான வதந்தியை சிலர் கிளப்பி விட்டனர். இது பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வட இந்திய மீடியாக்களும் பொய்ச் செய்தியை வைத்துக் கொண்டு நாளெல்லாம் கொதித்துக் கிடந்தன. ஆனால் எல்லாமே  வதந்தி என்பது உடனடியாக தமிழ்நாடு காவல்துறை, அரசு ஆகியவற்றால் நிரூபிக்கப்பட்டது. 

பத்திரிகையாளர் முகம்மது ஜூபைரும் அத்தனை வீடியோக்களும் போலியானவை என்று  தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்தார். இதனால் பொய்ச் செய்திகளின் வீரியம் குறைந்து போனது. இந்த நிலையில் இதுதொடர்பாக உங்களில் ஒருவன் கேள்வி பதில் தொடரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.



கேள்வி: வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதுபோல ஒரு பொய்யான செய்தி திட்டமிட்டு பரப்பப்படுகிறதே?

பதில்: தமிழ்நாட்டில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் காலம் காலமாக வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்! அவர்களுக்கு எந்தக் காலத்திலும் பாதிப்பு இருந்தது இல்லை. கடந்த சில ஆண்டுகளாக வேலை தேடி ஏராளமானவர்கள் வருகிறார்கள். இவர்களுக்குத் தமிழ்நாட்டில் எந்த ஊரிலும், எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனால் சிலர் பொய்யான வீடியோக்களைத் தயாரித்து பொய்யைப் பரப்பி இருக்கிறார்கள். வடமாநிலங்களைச் சேர்ந்த பா.ஜ.க நிர்வாகிகளே இதைச் செய்திருப்பது உள்நோக்கம் கொண்டதுதான்! பா.ஜ.க.வுக்கு எதிரான அரசியல் இயக்கங்கள் அகில இந்திய அளவில் ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தை, நான் எடுத்துக்கூறிய மறுநாளே, இப்படிப்பட்ட பொய் பரப்பப்பட்டதை கவனித்தீர்கள் என்றாலே, இதற்குப் பின்னால் இருக்கும் சூழ்ச்சி புரியும். இந்தச் செய்தி கிடைத்ததும், உடனே எங்காவது தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களா என்று விசாரித்தேன். எந்த இடத்திலும் சிறு தொல்லைகூட ஏற்படவில்லை என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் அவர்களுக்கும் தெரிவித்திருக்கிறேன். தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் உரிய விளக்கம் அளித்திருக்கிறார். பீகார் அதிகாரிகளும் இங்கு வந்து பார்த்து முழுத் திருப்தியோடு சென்றிருக்கிறார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும், 'வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு' என்றுதான் எல்லோரும் சொல்வார்கள். தமிழ்நாடும் - தமிழர்களும் ஒற்றுமையையும், சகோதரத்துவத்தையும் விரும்புகிறவர்கள். 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' – 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' போன்ற உயர்ந்த சிந்தனை கொண்டவர்கள். இது இங்கிருக்கும் வட மாநிலச் சகோதரர்களுக்கும் நன்றாகவே தெரியும்.

கேள்வி: கீழடி அருங்காட்சியகத்தை நீங்கள் திறந்து வைத்ததை தொலைக்காட்சியில் பார்த்தேன். மிகவும் பிரமாண்டமாக இருக்கிறதே?

பதில்: நேரில் சென்று பாருங்கள், இன்னும் பிரமிப்பாக இருக்கும். நாங்கள் எதிர்கட்சியாக இருந்த காலத்தில் இருந்து, கீழடிக்காகத் தொடர்ந்து சட்டமன்றத்தில் - மக்கள் மன்றத்தில் பேசிக்கொண்டே இருந்தோம��. எங்களுடைய தொடர் வற்புறுத்தலால்தான், அகழாய்வுப் பணியே நடந்தது. அங்கு அருங்காட்சியகம் அமையுங்கள் என்று தொடர் கோரிக்கை வைத்தேன். வெறும் அடிக்கல் மட்டும் நாட்டிவிட்டு, எந்த பணியையும் செய்யாமல் இருந்தார்கள். நாம் ஆட்சிக்கு வந்தவுடன்தான், அந்தப் பணியை விரைவுபடுத்தி, இப்போது முடித்திருக்கிறோம். அந்த அருங்காட்சியகத்தை திறந்து வைத்துப் பார்க்க தொடங்கியதும், என்னால் நகரவே முடியவில்லை. ஒவ்வொன்றையும் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதுபோல இருந்தது. 2600 ஆண்டுகளுக்கு முன்னால், கீழடியில் வாழ்ந்த மக்கள் என்னவெல்லாம் பயன்படுத்தினார்கள் என்பதைக் கண்டுபிடித்து, சேகரித்து நமது அரசு காட்சிப்படுத்தி இருக்கிறது.

ஆளுநர்களுக்கு வாய் மட்டும்தான் இருக்கிறது.. காதுகள் இல்லை .. மு.க.ஸ்டாலின் தாக்கு


ஒவ்வொரு இடத்திலும் நின்று ஆர்வத்தால், selfie (தாமி) எடுத்துக்கொண்டேன். எத்தகைய நாகரிகமும், பண்பாடும் கொண்டவர்களாகத் தமிழர்கள் இருந்தார்கள் என்பதை அறியும்போது பெருமையாக இருந்தது. அருங்காட்சியகம், காணொலி, தொடுதிரை, 3D எனத் தொழில்நுட்பத்தோடு அமைக்கப்பட்டிருக்கிறது. பொதுமக்கள் தங்களது பெயரினைத் தொடுதிரையில் எழுதினால் தமிழி எழுத்தில் தங்களது பெயரைக் காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இவ்வாறு சொல்லிக் கொண்டே போகலாம். அனைவரும் நேரில் சென்று பாருங்கள். உலகத் தமிழர் அனைவரும் தங்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது கீழடி வந்து பாருங்கள். இதே போல் நெல்லையில் பொருநை அருங்காட்சியகமும் தயாராகி வருகிறது என்பதையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

கேள்வி: நேற்று மகளிர் தினம். மகளிருக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பதில்: நிமிர்ந்த நன்னடை - நேர்கொண்ட பார்வை - நிலத்தில் யார்க்கும் அஞ்சாத துணிச்சல் கொண்டவர்களாக மகளிர் அனைவரும் உயர வேண்டும் என்பதே எனது எண்ணம். அனைத்து மகளிரும் படிக்கவேண்டும், உயர்கல்வியைப் பெற வேண்டும். உரிய வேலைகளுக்குச் செல்ல வேண்டும். திருமணம் - குழந்தைகள் - குடும்பம் ஆகியவற்றோடு நிறைவடைந்துவிடாமல், சமூகப் பங்களிப்பைத் தங்கள் வாழ்நாள் முழுக்கச் செய்ய வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். பெண்களுக்கு நான் சொல்வதைவிட, ஆண்களுக்கு ஒரு அறிவுரை சொல்ல நினைக்கிறேன்... பெண்களைக் குறித்த ஆண்களின் பார்வையில் மாற்றம் வேண்டும் - இதுதான் ஆண்களுக்கு நான் சொல்லும் அறிவுரை.

கேள்வி: சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்பட்டிருக்கிறதே?

பதில்: இந்தியாவை வளர்த்துள்ளோம்... வளர்த்துள்ளோம் என்று பா.ஜ.க  சொல்வது எது தெரியுமா? 2014-ஆம் ஆண்டில் பாஜக ஆட்சிக்கு வரும்போது, ஒரு சிலிண்டரின் விலை 414 ரூபாய். இப்போது ஒரு சிலிண்டரின் விலை 1,118 ரூபாய் 50 பைசா. பாஜக ஆட்சிக்கு வரும்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சென்னையில் 72 ரூபாய் 26 பைசா. இப்போது விலை 102 ரூபாய் 63 பைசா. ஒரு லிட்டர் டீசல் விலை சென்னையில் 55 ரூபாய் 49 பைசா. இப்போது விலை 94 ரூபாய் 24 பைசா. பாஜக ஆட்சிக்கு வரும்போது ஒன்றிய அரசுக்கு இருந்த கடன் 54 லட்சம் கோடி ரூபாய். இப்போது இருக்கும் கடன் 147 லட்சம் கோடி ரூபாய். அதாவது மூன்று மடங்கு அதிகம்! இதுதான் பா.ஜ.க.வால் இந்தியா அடைந்த வளர்ச்சி!