தமிழ்நாட்டில்.. இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது

Meenakshi
Aug 21, 2024,03:25 PM IST

சென்னை: தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடங்கியது.


தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில்  அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு மொத்தம் 10,462 இடங்கள் உள்ளன. இதற்கான தரவரிசைப் பட்டியலில் 42,236 மாணவ மாணவிகள் இடம் பெற்றுள்ளனர். இதன் அடிப்படையில் ஓரிடத்திற்கு 4 பேர் போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு  இணையதளத்தில் இன்று தொடங்கியது. இதன் மூலம் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு, அந்தந்த தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் இன்று காலை 10 மணி முதல் ஆகஸ்ட் 27  தேதி மாலை 5 மணி வரை இணையவழியில்  பதிவு  செய்து, கட்டணம் செலுத்தி இடங்களைத் தேர்வு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதி இட ஒதுக்கீடு ஆகஸ்ட் 28ம் தேதி தரவரிசை பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.




இதன்படி தற்காலிக இடஒதுக்கீடு 29ம் தேதியும், இறுதி இட ஒதுக்கீடு ஆகஸ்ட் 30ம் தேதியும் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 30ம் தேதி முதல் செப்டம்பர் 5ம் தேதி வரை இட ஒதுக்கீடு பெற்ற கல்லூரியில் சேர வேண்டுமாம். மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடங்கள் ஆகியவற்றிற்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 22ம் தேதி நாளை நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் நேரடியாகவே நடைபெற உள்ளது.


கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் நீட் ஹால் டிக்கெட், மதிப்பெண் அட்டை, 10,11,12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட அனைத்தும் எடுத்து வந்து கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என்றும், மேலும் இது குறித்த கூடுதல் விபரங்களுக்கு www.tnmedicalselection.org, www.tnhealth.tn.gov.in என்ற இணையதளங்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்