படிச்சவங்களுக்கு ஓட்டுப் போடுங்கன்னு சொன்ன வாத்தியார் டிஸ்மிஸ்!

Su.tha Arivalagan
Aug 18, 2023,09:40 AM IST
டெல்லி: படித்தவர்களுக்கு மட்டுமே வாக்களியுங்கள் என்று மாணவர்களுக்குப் போதித்த ஆசிரியரை வேலையை விட்டு நீக்கியுள்ளது அன்அகாடமி நிறுவனம்.

அன்அகாடமி என்பது நீட் உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான கோச்சிங் கொடுக்கும் ஆன்லைன் கல்வி நிறுவனம் ஆகும். இதில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் கரண் சங்வான். இவர் தான் வகுப்பு எடுத்தபோது அங்கிருந்த மாணவர்களிடம், தேர்தலின்போது படித்த , தகுதி வாய்ந்த வேட்பாளர்களுக்கு மட்டுமே வாக்களியுங்கள் என்று அறிவுரை கூறியதாக தெரிகிறது.



இதைத் தொடர்ந்து தற்போது சங்க்வானை வேலையை விட்டு நீக்கியுள்ளது அன்அகாடமி நிறுவனம். இதுதொடர்பாக அது வெளியிட்டுள்ள டிவீட்டில்,  தரமான கல்வியைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதை மட்டுமே நோக்கமாக கொண்ட கல்வி நிறுவனம் இது.  இந்த இடத்தில் எங்களது அனைத்து போதனையாளர்களும் ஒழுங்கை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். பயில வரும் மாணவர்களுக்கு பாரபட்சமில்லாத அறிவைப் புகட்ட வேண்டும் என்று விரும்புகிறோம்.

வகுப்பறை என்பது தனிப்பட்ட அரசியல் கருத்துக்களைப் பகிரும் இடம் இல்லை. அது மாணவர்களை தவறான பாதைக்கு இட்டுச் சென்று விடும். இந்த நிலையில், ஆசிரியர் கரண் சங்க்வானை அவரது விதிமுறை மீறலுக்காக நீக்கும் முடிவை எடுக்கும் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளது.

கெஜ்ரிவால் கண்டனம்

அன்அகாடாமியின் இந்த செயலுக்கு டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். படித்த வேட்பாளரை தேர்ந்தெடுங்க என்று சொல்வது குற்றச் செயலா என்றும் அவர் ஆச்சரியத்துடன் கேட்டுள்ளார்.

அன்அகாடமியின் செயலை  பலரும் கூட கண்டித்து வருகின்றனர். வேட்பாளர்களுக்கு குறைந்தபட்ச தகுதியை நிர்ணயிக்க வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்து வரும் நிலையில் ஒரு ஆசிரியர், படித்த வேட்பாளரை தேர்வு பண்ணுங்க என்று கூறுவது எந்த வகையில் தவறானது என்றும் பலர் அன்அகாடமிக்கு கேள்வியை முன்வைத்துள்ளனர்.