இசை இதயங்களின் தாழ் திறந்தவர்.. நான் பாதி இசை பாதி என்றவர்.. சுகம் கூட்டிய ஆனந்த ராகம்.. உமா ரமணன்!

Su.tha Arivalagan
May 02, 2024,06:39 PM IST

- பொன் லட்சுமி


சென்னை: "பூங்கதவே தாழ் திறவாய் "... இசை இதயங்களின் கதவுகளைத் தட்டித் திறந்தவர்.. தனது ஆனந்தா ராகத்தால் இசைப் பிரியர்களின் இதயங்களை முட்டித் திறந்த குரல்.. இன்று மறைந்து விட்டது.. பின்னணிப் பாடகி உமா ரமணணன் உடல் நலக்குறைவால் காலமாகியுள்ளார். 


72 வயதான உமா ரமணன், தமிழ் சினிமா கண்ட அரியதொரு பாடகி ஆவார். அவர் பாடிய அத்தனை பாடல்களுமே முத்துக்கள்தான். டிசிப்ளின் நிறைந்த குரல் வளம், அருமையான பாடல்கள், அட்டகாசமான முழுமை என உமா ரமணன் பாடிய பாடல்களை வரிசைப்படுத்தலாம்.


கடந்த சில மாதங்களாக உடல் நல குறைவால் அவதிப்பட்டு வந்த உமா ரமணன்  அவரது இல்லத்தில் நேற்று இரவு 9.30 மணி அளவில் காலமானார். அருமையான பாடகியை  தமிழ் சினிமா இன்று இழந்துள்ளது ... காந்தம் போன்ற அனைவரையும் மயக்கும் மிகவும்  வித்தியாசமான குரலைஉடையவர் உமா ரமணன்.




1977ல் வெளியான ஸ்ரீகிருஷ்ண லீலா என்ற படம்தான் உமா ரமணனின் குரல் ஒலித்த முதல் படம். ஆனால் இப்படத்தை விட அவர் அடுத்து பாடிய பாடல்தான் தமிழ் திரை ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளையடித்து அவரை புகழின் உச்சாணிக்குக் கொண்டு சென்றது. அதுதான் நிழல்கள் படத்தில் வந்த பூங்கதவே தாழ் திறவாய்.. தமிழ்த் திரை இசையில் பலரை அறிமுகம் செய்து வைத்த பெருமைக்குரிய இசைஞானி இளையராஜா, 1980ல் தான் இசையமைத்த நிழல்கள் படத்தில் பூங்கதவே தாழ்திறவாய் என்ற பாடல் மூலம் திரையுலகிற்கு உமா ரமணன் சகாப்தத்தின் வருகையை அறிமுகப்படுத்தினார்.  இந்த பாடல் தான் அவரை முன்னணி பாடகர்கள் பட்டியலில் சேர்த்தது.


தொடர்ந்து இளையராஜா  இசையில் நூற்றுக்கு மேற்பட்ட மாடல்களை பாடியுள்ளார்.. அவர் மட்டுமல்லாமல் எம் எஸ் விஸ்வநாதன்,  வித்யாசாகர், தேவா, மணி ஷர்மா போன்ற  இயக்குனர்களின் இசையிலும் பாடியுள்ளார்... இவரை இளையராஜா கண்டெடுத்த அழகிய முத்து என்றே கூறலாம்... பன்னீர் புஷ்பங்கள் படத்தில் ஆனந்த ராகம் என்ற பாடல் பள்ளிக்காலம் முதல் இன்று வரை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல்  மனதிற்கு இதமாக இருக்கும்... இளையராஜாவுடன் அவர் பாடிய பாடல்கள் அனைத்துமே செம ஹிட் சாங் .


அதிலும் முக்கியமான இந்தப் பாடல்களை என்றுமே மறக்க முடியாது..


பன்னீர் புஷ்பங்கள் படத்தில் ஆனந்த ராகம் என்ற பாடல், கேளடி கண்மணி படத்தில் நீ பாதி நான் பாதி என்ற பாடல், வைதேகி காத்திருந்தாள் என்ற படத்தில் மேகம் கருக்கையிலே, நந்தவன தெரு என்ற படத்தில் வெள்ளி நிலவே, தூறல் நின்று போச்சு படத்தில் பூபாளம் இசைக்கும், தென்றலே என்னை தொடு படத்தில் இடம் பெற்ற கண்மணி நீ வர காத்திருந்தேன்  பாடல், அரங்கேற்ற வேளை படத்தில் ஆகாய வெண்ணிலாவே என்ற பாடல். புதுப்பட்டி பொன்னுத்தாயி படத்தில் ஊரடங்கும் சாமத்திலே என்ற பாடல், பாட்டு பாடவா படத்தில் நில் நில் நில் பதில் சொல் என்ற பாடல் என ஏராளம் உள்ளன.


இவரது கணவர் ஏவி ரமணனும் ஒரு இசைக் கலைஞர்தான். இருவரும் இணைந்தும் பல பாடல்கள் பாடியுள்ளனர். உமா ரமணனின்  இறுதிச்சடங்கு இன்று அவரது இல்லத்தில்   நடைபெறுகிறது. உமா ரமணனின் மறைவுக்கு இசை ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.